வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தப்பிக்க சில ஐடியாக்கள்: நாய் தூக்கிட்டு போயிடுச்சு. காக்க வந்து கவ்விட்டு போயிருச்சு. புடின் ஆள் வெச்சது எடுத்துட்டு போயிட்டாரு.
திருப்புவனம்: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் வீசப்பட்டது, பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அரசின் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறுவதற்காக, 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தை, தி.மு.க., அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக மக்கள் வசிக்கும் பகுதிகளில் முகாம்கள் நடத்தி மனுக்களை பெற்று வருகின்றனர். அந்த மனுக்களுக்கு, 45 நாட்களில் தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v5w8v49l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதிர்ச்சி
இந்நிலையில், சிவங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தண்ணீரில் மிதந்தது, பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.இந்த மனுக்கள் எல்லாம், திருப்புவனம் தாலுகாவை சேர்ந்த பூவந்தி, மடப்புரம், திருப்புவனம் நெல்முடிகரை, கொந்தகை, கீழடி கிராமங்கள் உள்ளிட்ட இடங்களில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்பட்டவை. தாசில்தார், ஆர்.ஐ., - வி.ஏ.ஓ., ஆகியோரின் கையெழுத்துடன், பொதுமக்கள் அளித்த மனுக்கள் வைகை ஆற்றில் மூட்டையாக கட்டி வீசப்பட்டுள்ளன.இது குறித்து தி.வடகரை கார்த்திக் கூறுகையில், ''வைகை ஆற்றில் குளிக்க வந்த போது ஏராளமான காகிதங்கள், பாதி தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்தன. அனைத்திலும் தாசில்தார் கையெழுத்து இருந்தது. மனுக்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில், 20 அடிக்கும் மேலாக ஆழம் உள்ளது. எனவே, இன்னும் மனுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.இது குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் பொற்கொடி வெளிட்ட அறிக்கை:விசாரணை திருப்புவனம் வைகை ஆற்றில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. சிவகங்கை ஆர்.டி.ஓ., விஜயகுமார் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. அப்பகுதியில் பெறப்பட்ட மனுக்களில், பட்டா மாறுதல் கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்ட ஆறு மனுக்களின் நகல்கள் மற்றும் தாசில்தார் அலுவலகம் வழியே பெறப்பட்ட ஏழு மனுக்களின் நகல் கிடந்துள்ளன.திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்த அலுவலர், ஊழியர்களிடம் விசாரணை நடக்கிறது. இது குறித்து போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில், இது போன்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்களை, அதிகாரிகள் வழக்கமான குறைதீர்ப்பு நாள் மனுக்களாகவோ, மற்ற சாதாரண மனுக்களாகவோ கருதக்கூடாது' என, துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தி உள்ளார். மாநிலம் முழுதும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில், பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களுடன், துணை முதல்வர் உதயநிதி, தலைமை செயலகத்தில் இருந்தபடி, நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: இதுவரை 4,600 முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த திட்டத்திற்கு, அனைத்து மாவட்டங்களிலும், பொதுமக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் நம்பிக்கையோடு மனு கொடுத்துள்ளனர். பல நேரங்களில், முகாம்களிலேயே மனுக்களுக்கு தீர்வு கண்டு, பொதுமக்கள் கேட்ட சான்றிதழ்களை உடனே கொடுத்திருக்கிறோம். தமிழகம் முழுதும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு, 17 லட்சம் மனுக்கள் உட்பட மொத்தம், 28.5 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்களை எல்லாம் காகிதமாக பார்க்காமல், பொதுமக்களுடைய வாழ்க்கையாக, தனி மனிதனுடைய வாழ்க்கையாக பார்க்க வேண்டும்.அரசை நம்பி பொதுமக்கள் வைக்கக் கூடிய கோரிக்கைகளை, நாம் முடிந்த அளவிற்கு, வெகு விரைவாக தீர்த்து வைக்க வேண்டும். இந்த மனுக்களை, நாம் வழக்கமான குறை தீர்ப்பு நாள் மனுக்களாகவோ, மற்ற சாதாரண மனுக்களாகவோ கருதக்கூடாது. இந்த மனுக்களுக்கு, அதிகாரிகள் அனைவரும் அதிகளவு முக்கியத்துவம் அளித்து, மக்களுடைய தேவைகளுக்கு தீர்வு காண வேண்டும். தீர்வு காண இயலாத மனுக்களுக்கான காரணத்தை, முறையாக பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு துணை முதல்வர் பேசினார். கூட்டத்தில், தலைமை செயலர் முருகானந்தம், சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை செயலர் பிரதீப் யாதவ், வருவாய் துறை செயலர் அமுதா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: எதிர்க்கட்சியாக இருந்த போது, ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கருப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளன; சாவியை காணவில்லை. 'நீட்' ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து, ஆளுங்கட்சியான பிறகும் கூட, வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி, மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களும், காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டன. 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் தி.மு.க., அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல வைகையாற்றில் மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளன. மக்களின் வலிகளை, உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல, தி.மு.க., அரசு நாடகமாடுகிறது. 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த தி.மு.க., அரசுக்கு, வரும், 2026 சட்டசபை தேர்தலில், மக்கள் தக்க பாடம் புகட்டுவர். தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: 'உங்களுடன் ஸ்டாலின்' குறைதீர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள், சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதியில் கொட்டப்பட்டுள்ள சம்பவம், தி.மு.க., அரசின் அவலநிலைக்கான சாட்சி. குறைகளை கேட்டறிய தலைவர்கள் வரும் போது, திரை கட்டி கழிவுநீர் ஓடைகளை மறைப்பதும், குறைகளை சுட்டிக்காட்டி அளிக்கப்படும் மனுக்களை, ஆற்றில் வீசி எறிவதும் தான், தி.மு.க., அரசின் குறைதீர்ப்பு லட்சணமா. தன் பணிகளை விட்டு, கூட்டத்தில் கால்கடுக்க, வியர்வை சிந்தி நின்று, மனு அளித்தால் அதை நீரில் மிதக்க விடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியா? பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை: திட்டங்களுக்கு ஆடம்பரமான பெயர்களை வைப்பதும், வரி செலுத்துவோரின் பணத்தை விளம்பரத்திற்காக வீணாக்குவதும் தி.மு.க.,அரசின் அடையாளமாக மாறிவிட்டது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள், வைகை ஆற்றில் மிதப்பது, தி.மு.க., அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது.
தப்பிக்க சில ஐடியாக்கள்: நாய் தூக்கிட்டு போயிடுச்சு. காக்க வந்து கவ்விட்டு போயிருச்சு. புடின் ஆள் வெச்சது எடுத்துட்டு போயிட்டாரு.