உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுசிலா, கவிஞர் மேத்தாவுக்கு கலைஞர் நினைவு வித்தகர் விருது

சுசிலா, கவிஞர் மேத்தாவுக்கு கலைஞர் நினைவு வித்தகர் விருது

சென்னை:கவிஞர் மேத்தா, திரைப்பட பின்னணி பாடகி சுசிலா ஆகியோருக்கு, 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. விருதாளர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும். கவிஞர் முகமது மேத்தா, பெரியகுளத்தில் 1945 செப்., 5ல் பிறந்தவர். மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல நுால்களை படைத்ததுடன், 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார். இவரது, 'ஊர்வலம்' கவிதை நுாலுக்கு, தமிழக அரசின் முதல் பரிசு; 'ஆகாயத்திற்கு அடுத்த வீடு' என்ற கவிதை நுாலுக்கு, 'சாகித்ய அகாடமி' விருது வழங்கப்பட்டுள்ளது.பின்னணி பாடகி பி.சுசிலா, ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில், 1935 நவம்பர், 13ல் பிறந்தவர். 70 ஆண்டுகளுக்கும் மேலான தன் இசைப் பயணத்தில், 25,000க்கும் மேற்பட்ட, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடி சாதனைகள் படைத்தவர். தமிழக அரசு மற்றும் மத்திய அரசு விருதுகளை, பலமுறை பெற்றுள்ளார். இந்திய மொழிகளில் அதிக எண்ணிக்கையில் பாடல்களை பாடியதற்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இருவருக்கும் வரும் 30ம் தேதி தலைமை செயலகத்தில், விருதுகளை வழங்கி, முதல்வர் ஸ்டாலின் கவுரவிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை