சென்னை:''துார்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி, 39.71 கோடி ரூபாயில், டி.டி., தமிழ் சேனலாக புதுப்பொலிவு பெற்றுள்ளது,'' என, மத்திய தகவல், ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:'பொதிகை' என்ற பெயரில், இதுவரை தமிழ் ஒளிபரப்பு சேவையை வழங்கி வந்த துார்தர்ஷன் தொலைக்காட்சி, 39.71 கோடி ரூபாயில், 'டி.டி., தமிழ்' என்ற பெயரில், புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில், துார்தர்ஷனின் பாரம்பரியம் குறையாமல்,புதிய எண்ணங்கள், புதிய வண்ணங்கள் என்ற லட்சியத்துடன், புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.நெடுந்தொடர்கள், சினிமா படங்கள், சினிமா பாடல்கள் அடங்கிய ஒலியும், ஒளியும் என்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகள், தனியார் சேனல்களுக்கு இணையாக ஒளிபரப்பாக உள்ளனன. ஐந்து நிமிட விரைவு செய்திகள், தினமும் மூன்று முறை, 30 நிமிட செய்தி அறிக்கைகள் இடம் பெறும். தினமும் மாலை, 6:00 முதல் 7:00 மணி வரை, எதிரும் புதிரும் என்ற தலைப்பில், விவாத நிகழ்ச்சியும் நடக்கும்.தனியார் சேனல்களில், நெடுந்தொடர்களை தயாரிக்கும் பிரபல நிறுவனங்களின் மூன்று நெடுந்தொடர்கள், தினமும் இரவில் ஒளிபரப்பாக உள்ளன. வார நாட்களில் மகாகவி பாரதி தொடரும் ஒளிபரப்பாகும். இதுதவிர சமையல், சுற்றுலா, ஆயுர்வேதம்,வீட்டு மருத்துவம், திருமந்திரம் என பல்வேறு நிகழ்ச்சிகளும், இனி தொடர்ந்து இடம் பெறும். உலகெங்கும் வாழும் தமிழர்கள், தங்கள் பகுதிகளில் தமிழ் கலாசாரத்தை எப்படி பாதுகாக்கின்றனர் என்பதை சித்தரிக்கும் தமிழ் பாலம் நிகழ்ச்சியை, டி.டி., தமிழ் தயாரித்து வழங்கவுள்ளது. கனரா வங்கி உதவியுடன், ஸ்டார்ட் அப் ஹேண்ட்ஷேக் என்ற நிகழ்ச்சியும் புதிதாக இடம்பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது, பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி கவுரவ் திவேதி உடனிருந்தார்.
முக்கிய நிகழ்ச்சிகள்
● காலை 8:00, 9:00, 10:00 மணி; பகல் 12:00, 2:00, 3:00, மாலை 4:00 மணிக்கு, 5 நிமிட விரைவுச் செய்திகள்● காலை 11:00, பகல் 1:00, மாலை 5:00 மணிக்கு 30 நிமிட செய்தி அறிக்கை● இரவு 7:00 மணிக்கு பல்வேறு புதிய அம்சங்களுடன் ஒரு மணி நேர செய்தி● இரவு 10:00 மணிக்கு விரைவு செய்தி● தினந்தோறும் திரைப்படம் ஒளிப்பரப்பாகும்.● மாலை 6:00 முதல் 7:00 மணி வரை எதிரும் புதிரும் விவாத நிகழ்ச்சி● இரவு நேரங்களில் பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் தாயம்மா குடும்பத்தார், பட்ஜெட் குடும்பம், சக்தி ஐ.பி.எஸ்., நெடுந்தொடர்கள்● வார நாட்களில் மகாகவி பாரதி தொடர்● உலகெங்கும் வாழும் தமிழர்கள் வாழ்வை சித்தரிக்கும் தமிழ் பாலம் நிகழ்ச்சி● தினசரி பக்தி இலக்கியமான திருமந்திரம் நிகழ்ச்சி.
12 புதிய பண்பலை நிலையம்
கேலோ
போட்டிகள் துவக்க விழாவில் பிரதமர் மோடி, துார்தர்ஷன் 'பொதிகை' 'டிவி'யின்
பொலிவு பெற்ற, 'டிடி தமிழ்' சேனலையும் துவக்கி வைத்தார். அப்போது, அவர்
பேசியதாவது: கடந்த, 1975ம் ஆண்டில், முதல் ஒளிபரப்பை துவங்கிய சென்னை
துார்தர்ஷன், தற்போது புதிய பயணத்தை துவக்கியுள்ளது. 'டிடி தமிழ்' சேனல்
என்ற புதிய வடிவம் பெற்றுள்ளது.எட்டு மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ள, 12
புதிய பண்பலை ஒலிபரப்புகள், 1.5 கோடி மக்களுக்கு பலன் அளிக்கும். தமிழக
மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்கள்.இவ்வாறு மோடி
பேசினார்.