வரும் 12 வரை வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்
சென்னை: தமிழகத்தில் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உ ள்ளது. அந்த மையத்தின் அறிக்கை: தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை காணப்படும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில், அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 12ம் தேதி வரை, பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்; அதிகாலையில் மிதமான பனிமூட்டம் நிலவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.