தாயம்மாள் அறவாணனுக்கு செம்மொழி தமிழ் விருது
சென்னை:மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளையொட்டி, செம்மொழி நாள் விழா, 2025ம் ஆண்டுக்கான செம்மொழி தமிழ் விருது வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தன.விழாவில், 2025ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை, முனைவர் தாயம்மாள் அறவாணனுக்கு, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். விருதுத் தொகையாக, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் கருணாநிதி சிலை வழங்கப்பட்டது.விருது பெற்ற தாயம்மாள், 1944 மே 23ல் கன்னியாகுமரி மாவட்டம் சேந்தன்புதுார் என்ற ஊரில் பிறந்தவர். 'குழந்தை இலக்கியம் ஒரு பகுப்பாய்வு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றவர்.செம்மொழி நாளையொட்டி, மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு இடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, முதல்வர் பரிசுகள் வழங்கினார். தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் 4,500; வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு 3,500; எல்லை காவலர்களுக்கு 5,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இது, இந்த ஆண்டு முதல், 7,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.அதற்கான அரசாணையை, முதல்வர் நேற்று வெளியிட்டு, ஐந்து பேருக்கு புதிய உதவித்தொகையை வழங்கினார். அதைத் தொடர்ந்து, செய்தித் துறை சார்பில் உருவாக்கப்பட்ட நான்காண்டு சாதனை மலர்; செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ராஜேந்திரன் சங்கரவேலாயுதன் எழுதிய, 'தமிழ் வினையடிகள் - வரலாற்று மொழியியல் ஆய்வு' மற்றும் பா.ரா.சுப்பிரமணியன் எழுதிய, 'சங்க இலக்கிய சொல்வளம்' ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன.சுகிசிவம் தலைமையில், 'செம்மொழியின் தனிச்சிறப்பு அதன் தொன்மையே; அதன் இளமையே' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.அமைச்சர்கள் நேரு, வேலு, பெரியசாமி, பன்னீர்செல்வம், பெரியகருப்பன், சாமிநாதன், சுப்பிரமணியன், சேகர்பாபு, கூட்டணி கட்சி தலைவர்கள், செய்தித் துறை செயலர் ராஜாராமன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கவிதா ராமு, செய்தித் துறை இயக்குநர் வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள் பங்கேற்றனர்.