சென்னை: சென்னையில் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: திருச்செந்துார் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்ய, பக்தர்களிடம் அர்ச்சகர்கள் பணம் பெற்று, எஸ்.எம்.எஸ்., வாயிலாக 'க்யூ.ஆர்., கோடு' அனுப்பி, முறைகேட்டில் ஈடுபட்டதாக வீடியோ வெளியாகி உள்ளது. இதில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு தொடர்பு இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அப்படி சொல்பவர்கள், அதற்கான ஆதாரத்தை கொடுத்தால், கட்சித் தலைமைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி, தமிழகம் வந்து, நிறைய கருத்துகளை விழா மேடைகளில் சொல்லி உள்ளார். அதற்காக நன்றி, மகிழ்ச்சி, வரவேற்கிறோம். அதே நேரம், தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுக்காமல் இருக்கும் கல்வி நிதியை தருவதற்கு பிரதமர் நடவடிக்கை எடுத்தால், அதற்காக அவரை பாராட்டுவோம். மெட்ரோ ரயில், பேரிடர் நிவாரணத்துக்கு வழங்க வேண்டிய நிதிகளையும் மத்திய அரசு தர வேண்டும். அதேபோல, தமிழக வளர்ச்சிக்காக முதல்வர் அளித்துள்ள கோரிக்கைகளையும் பிரதமர் நிறைவேற்ற வேண்டும். இதெல்லாம் கேட்க, தமிழகத்துக்கு முழு உரிமை இருக்கிறது. காரணம், கடந்த ஆட்சியைக் காட்டிலும், தற்போதைய தி.மு.க., அரசு, கூடுதல் ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது. ஆனால், தமிழகத்துக்கு கொடுக்க வேண்டியதை மத்திய அரசு எப்போதும் குறைத்து தான் கொடுக்கிறது. முதல்வர் உத்தரவின்படி, நிதி அமைச்சர் மற்றும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிரதமர் மீது, தி.மு.க., அரசு, எப்போதும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறது. ஆனால், நானும் இருக்கிறேன் என்று சொல்லாத குறையாக, பழனிசாமியும் பிரதமரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறார். அதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. அது அவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.