புதிய தலைமைச் செயலகம்: விசாரணை கமிஷனை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை : புதிய தலைமைச் செயலகம் கட்டுமானம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி தங்கராஜ் கமிஷன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த, தி.மு.க., எம்.எல்.ஏ., உள்ளிட்ட இரண்டு பேர் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றது. தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முருகேசன், சசிதரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: அரசியல் உள்நோக்கம் கொண்டு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என்றும், முறைகேடுகள் நடந்ததாக முன்கூட்டியே அரசாணையில் முடிவுக்கு வந்துள்ளனர் என்றும், சுதந்திரமான விசாரணைக்கு வாய்ப்பில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்டுமானம் தொடர்பாக, எந்த புகாரும் வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையால் பாதிக்கப்படுவதாகவும், எம்.எல்.ஏ., என்கிற முறையில் அரசாணை குறித்து கேள்வி எழுப்புவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் எழுப்பியுள்ள முகாந்திரங்கள், வாதாடுவதற்குரியது. மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கான முகாந்திரங்கள் உள்ளன. எனவே, இம்மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். இதற்கு இரண்டு வாரங்களில் அரசு பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
விஜயலட்சுமி மனுவை விசாரித்த 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மனுதாரர், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் மனுதாரர் ஆர்வமாக உள்ளார் என, அவரது வழக்கறிஞர் வாதிட்டார். மனுதாரரின் வழக்கறிஞர் எழுப்பியுள்ள வாதத்தில் நாங்கள் சமாதானம் அடைகிறோம். மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். இதற்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.தங்கம் தென்னரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் விடுதலை, விஜயலட்சுமி சார்பில் வழக்கறிஞர் மணிகண்டன் வரதன் வாதிட்டனர்.