பனை என்ற கற்பக தருவை பாதுகாக்க பனங்காட்டில் நடந்த பரவச திருவிழா
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டத்தில் உள்ளது வேம்பி மதுரா பூரிகுடிசை கிராமம். இந்த கிராம மக்கள், பனங்காடு எனப்படும், பனை மரங்கள் சூழ்ந்த இடத்தில், பனைக்கனவு என்ற திருவிழாவினை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்; நான்காவது ஆண்டாக நேற்றும் நடத்தினர்.நுங்கு முதல் பனங்கிழங்கு வரை, 80க்கும் மேற்பட்ட உணவு பொருட்களை வழங்கிடும் பனை மரங்கள், ஒரு காலத்தில், 50 கோடி அளவுக்கு இருந்தன. இப்போது அதன் எண்ணிக்கை வெறும், 5 கோடியாக சுருங்கி விட்டது. அதேபோல பனைத்தொழிலை நம்பி, 10 லட்சம் பேர் வாழ்ந்தனர்; இப்போது, அவர்களின் எண்ணிக்கை, 10,000 ஆக குறைந்து விட்டது. இந்த 10,000 பேரும் தினக்கூலி தொழிலாளர்களாக, அன்றாடம் காய்ச்சிகளாக மாறி வருகின்றனர்; அதற்கு காரணம் பனையை நம்பி வாழமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். உண்மையில் பனை என்பது கற்கபத்தரு; அது, கேட்டதெல்லாம் தரும்; பல தலைமுறைகளை வாழவைக்கும்.இத்தகைய சிறப்பு வாய்ந்த பனை மரங்களை காக்கவும், பனை பொருட்களை பிரபலப்படுத்தவும், பனை தொழிலாளர்கள் வாழ்வை மீட்டுரு செய்யவும், 'பனைக்கனவு திருவிழா' நடத்தப்படுவதாக கூறுகிறார், விழாவின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன்.இந்த ஒருநாள் திருவிழாவின் போது, காலை நேரத்தில், பனையேறிகள் பனையிலிருந்து கிடைத்த கள்ளை, ஊர்வலமாக சுமந்து வந்து பனை மரத்திற்கு கீழ் வைத்து படையலிட்டு வணங்கிய பின், விரும்பியவர்களுக்கு வழங்கினர்; பலரும் குடும்பத்துடன் கள்ளை வாங்கி மகிழ்வுடன் குடித்தனர். பின்னர், பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கள் நல்லுசாமி போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தமிழகம் முழுதும் இருந்து வந்திருந்த இயற்கை பொருள் விற்பனையாளர்கள், தத்தம் பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தனர். பனை ஓலையில் செய்யப்பட்ட பல பொருட்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. அதிலும் பனை ஒலை நகைகள் தனிக்கவனம் பெற்றன. நுங்கு, பனங்கிழங்கு, பதநீர், நீரா பானம் உள்ளிட்ட பனை உணவு பொருட்களையும் மக்கள் வாங்கி ரசித்து சாப்பிட்டனர். மாலையில், பனைமரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது. இதில், விரைந்து பனையேறி வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் வருணேஷ் என்ற சிறுவன் பங்கேற்று பாராட்டுகளை பெற்றான். தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவின் நிறைவாக, இரவு 9:00 மணியளவில் 1,000 பேர் கலந்து கொண்ட மாவொளி எனப்படும், தீப்பந்தம் சுழற்றும் நிகழ்வு நடந்தது. மாவொளி நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கள் நம் உணவு, உரிமை
விழாவில், கள்ளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டது; கள் என்பது போதைப்பொருள் அல்ல. கள் சாப்பிட்டதால், இதுவரை ஒருவர் கூட இறந்தது கிடையாது. அது ஒரு உணவு; இன்னும் சொல்லப்போனால் அது ஒரு மருந்து. பனையேறி மக்களின் உரிமை. ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில், கள் இறக்கவும், பருகவும் எந்த தடையும் இல்லை. தமிழகத்தில் மட்டும் கள் இறக்க தேவையின்றி தடை விதித்துள்ளனர்.பிராந்தி, விஸ்கி, ரம் போன்று மக்களின் உயிரை பறிக்கும் மதுபானங்கள் தாராளமாக கிடைக்கும் தமிழகத்தில், கள் என்ற உணவுப் பொருளுக்கு தடை ஏன் என்பதற்கான விடை தான் கிடைக்கவில்லை என்று, விழாவில் பேசிய பலர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டனர். - நமது நிருபர் -