டில்லியில் முழங்கிய குரல் நாடெங்கும் எதிரொலிக்கும்!
சென்னை:'யு.ஜி.சி., வரைவு நெறிமுறைகளை எதிர்த்து, டில்லியில் முழங்கிய நம் குரல் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., வரைவு நெறிமுறைகளை எதிர்க்கும் போராட்டத்தில், மாணவர்களின் குரலை வலுப்படுத்தியதற்கும், கல்வியின் எதிர்காலத்தை பாதுகாக்கத் தோள் கொடுத்தமைக்கும் தி.மு.க., மாணவரணியினர், எம்.பி.,க்கள் மற்றும் ராகுல், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட, 'இண்டி' கூட்டணித் தலைவர்களுக்கு என் நன்றிகள்.பன்மைத்துவம் கொண்ட வரலாறு, பண்பாடு மற்றும் மொழிகளை அழித்து, ஒற்றைத்துவத்தைத் திணிப்பது என, ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வின் செயல் திட்டம் தெளிவாக உள்ளது. 'யு.ஜி.சி., வரைவு நெறிமுறைகள் வெறும் கல்வி சார்ந்த நகர்வல்ல, அது தமிழகத்தின் வளமான மரபின் மீதும், இந்தியக் கூட்டாட்சியியலின் அடிப்படை மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்' என, பார்லிமென்ட் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மிகச் சரியாகச் சுட்டிக்காட்டினார்.'நீட்' மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் முதல் மூன்று வேளாண் சட்டங்கள் வரை, நமது அரசியலமைப்பினையும், பன்மைத்துவத்தையும் காப்பதற்கான அனைத்துப் போராட்டங்களையும் தி.மு.க., முன்னின்று நடத்தி உள்ளது. டில்லியில் முழங்கிய நம் குரல், இந்தியாவெங்கும் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.