உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல் இதோ!

லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல் இதோ!

சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு கொடுத்த வக்கீல் ஒருவரிடம், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் கேட்ட ராசிபுரம் நகராட்சி பில் கலெக்டர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில், இரண்டு நாட்களுக்கு முன், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. அதில், அரசு திட்டங்கள், மகளிர் உரிமைத் தொகை, ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், வீட்டுவரி ரசீது, குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன.ராசிபுரம் நகராட்சி, 15வது வார்டை சேர்ந்தவர் வக்கீல் அன்பழகன், 50. இவர் குடிநீர் இணைப்பு பெயர் மாற்ற, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு அளித்திருந்தார்.ராசிபுரம் நகராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வந்தவர் ரகுபதி, 35. நாமக்கல்லை சேர்ந்த இவர், ஆறு ஆண்டுகளாக ராசிபுரத்தில் பணியாற்றி வந்தார்.இவர், அன்பழகனை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் கொடுக்குமாறு பேரம் பேசியுள்ளார். இந்த ஆடியோ, நேற்று வாட்ஸாப்பில் பரவியது. இதுகுறித்து, பொறுப்பு கமிஷனர் கோகுல்நாத், ஆடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரித்தார். இதையடுத்து, நகராட்சி நிர்வாகம், ரகுபதியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இவர், ஏற்கனவே, 'குடி'போதையில் வேலை பார்த்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லஞ்சம் வாங்கிய அலுவலர்

சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், மின் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சண்முகம், 47, என்பவர், 10 லட்சம் ரூபாய் ஒப்பந்த பணிக்கு, சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.அனுமதி வழங்க கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் முதுநிலை வரைவு அலுவலர் ரவி, 55, என்பவர், 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். சண்முகம், சேலம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் அளித்தார்.போலீசார் அறிவுறுத்தல்படி, அஸ்தம்பட்டி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு சென்ற சண்முகம், ரசாயனம் தடவிய, 1 லட்சம் ரூபாயை, மிட்டாபுதுாரை சேர்ந்த புரோக்கர் பிரகாஷ், 45, என்பவரிடம் நேற்று வழங்கினார்.அவர், பணத்தை வாங்கி, ரவியிடம் வழங்கினார். அப்போது, மறைந்திருந்த போலீசார், ரவி, பிரகாஷ் இருவரையும் கையும், களவுமாக கைது செய்தனர்.

பஞ்., தலைவர் சுற்றிவளைப்பு

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மேல்சாணாங்குப்பம் பஞ்., தலைவர் சிவக்குமார், 48. வாணியம்பாடி ஜனதாபுரத்தை சேர்ந்த, ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சீனிவாசன், மேல்சாணாங்குப்பத்தில், 7 ஏக்கர் நிலத்தில், வீட்டுமனை அமைக்க, நில வரைபடம் மற்றும் டி.டி.சி.பி., ஒப்புதல் பெற பஞ்., தலைவர் சிவக்குமாரை அணுகினார்.அவர், 12 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். அப்போது, 10 லட்சம் ரூபாய் தருவதாக கூறி, பணத்தை கொடுத்த நிலையில், மேலும், 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான், ஒப்புதல் தரப்படும் என, சிவக்குமார் கூறினார்.சீனிவாசன், திருப்பத்துார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் ரசாயனம் தடவி கொடுத்தனுப்பிய, 2 லட்சம் ரூபாயை, சிவக்குமாரிடம், நேற்று சீனிவாசன் கொடுத்தார். சிவக்குமார் பெற்றபோது, மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

VSMani
ஆக 22, 2025 10:02

வாங்குகிற சம்பளம் சாப்பாட்டுக்கும் பிள்ளைகளின் படிப்புக்கும் பெற்றோர்களின் மருத்துவ செலவுக்கும் பத்தவில்லை. பின்னர் என்ன பண்றது? அரசு தரமான கல்வி, மருத்டதுவம் போன்ற அத்தியாவசியமானவற்றை இலவசமாக கொடுத்தால் யார் லஞ்சம் வாங்குவார்கள்? கல்வி மருத்துவம் அதிக விலையில் விற்பனை. எனவேதான் லஞ்சம் வாங்குவதற்கு தள்ளப்படுகிறார்கள். லஞ்சம் வாங்கி அதில் பைக், கார், நகை, இடம், வீடு வாங்கும்போது கிடைக்கும் சந்தோசமே தனி. மாட்டிக்கொள்ளாமல் லஞ்சம் வாங்குவதிலும் தனி திறமை வேண்டும். இதற்கு சைக்காலஜி படித்திருந்தால் லஞ்சம் தந்து மாட்டிவிடுகிறவனின் மனதை எளிதில் புரிந்துகொண்டு அவனிடம் தான் ஒரு நேர்மையான அதிகாரிபோல் காட்டிக்கொண்டு லஞ்சம் தர வருகிறவனையே மாட்டிவிட்டு கோர்ட்டுக்கு இழுத்துடலாம். எல்லா அரசு அலுவலர்களுக்கும் மாட்டிக்கொள்ளாமல் லஞ்சம் வாங்குவது எப்படி, மாட்டிவிடவருகிறவனிடம் எப்படி நடந்துகொண்டு அவனையே மாட்டிவிடுவது எப்படி, ஒருவேளை மாட்டிக்கொண்டாலும் எப்படி அதிலிருந்து தப்பிப்பது, பின் மாட்டிவிட்டவனை எப்படி போட்டுத்தள்ளுவது போன்ற பாடம்களை நம் அரசியல்வாதிகளைக்கொண்டு கற்றுக்கொடுக்கவேண்டும்.


RAINBOW
ஜூலை 26, 2025 07:10

யோக்கிய சிகாமணிகள் ஆளும் நாட்டில் இப்படித்தான் இருக்கும்


Ramar P P
ஜூலை 23, 2025 23:18

இலஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்தால் ஒரு அரசு அலுவலகத்திலும் ஒரு ஆள் கூட வேலைக்கு இருக்க மாட்டார்கள்.நாட்டின் நிலமை அப்படி இருக்கு.


அப்பாவி
ஜூலை 23, 2025 16:09

சிக்குனவன் ஆறுன்பேர்னா சிக்காதவன் நூறு பேர். திருடனை கொஞ்ச நாளைக்கி சஸ்பெண்ட் பண்ணிட்டு வேலைக்கு சேத்துக்கிட்டா திரும்ப திருடத்தானே செய்வான்?


Ram
ஜூலை 23, 2025 15:36

ஏன் இவர்களை வேலையை விட்டு நீக்கி ஜெயிலில் தள்ளாமல், வெறும் சஸ்பெண்ட் மட்டும், அதுவும் எத்தனை நாளைக்கு என்று குறிப்பிடாமல் செய்கிறார்கள்.


Ramar P P
ஜூலை 23, 2025 23:23

ஒரு நடபடியும் எடுக்காமல் அதே துறையில் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள்.


peermohammednurullaraja peermohammednurullaraja
ஜூலை 23, 2025 12:28

இதுவும் ஒரு போக்சோ சட்டம் தான்


S.V.Srinivasan
ஜூலை 23, 2025 12:19

திமிங்கலத்தெல்லாம் விட்டுட்டு மீனை புடிச்சு கணக்கு காட்றாங்க.


தஞ்சை மன்னர்
ஜூலை 23, 2025 11:26

இன்றைய போகசோவில் கைது, லஞ்சம் வாங்கியவர்கள் கைது இது போன்ற செய்திகள் மற்ற மாநிலத்தில் நடப்பதும் போடலாமே மேலும் ஒருவேளை ஆட்சி மாறி உங்களுக்கு சாதகமான ஆட்சி அமைந்தால் இப்படி தனி செய்தி தொகுப்பாக வரும் என்று எண்ணுகிறேன்


Padmasridharan
ஜூலை 23, 2025 08:18

ரேஷன் கடையில சில்லறை திருப்பித் தராம வெச்சிக்கிறாங்க.. பொங்கலுக்கு நல்ல தடிமனான கரும்பு உள்ள வெச்சி தெரிஞ்சவங்களுக்கு கொடுத்து மெலிசானத வெளியில வெச்சி மத்தவங்களுக்கு கொடுத்தாங்க. புடவைங்க நிறைய கடைல தரல. பேருந்தில் ஒரு இலவச டிக்கெட்டுக்கு பதில் 2-3 கொடுத்துடறாங்க. இவை எல்லாமே லஞ்சத்தின் இன்னொரு பக்கம் சாமி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை