சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திராவை இணைக்கும் திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை திட்டம், 19 ஆண்டுகள் தாமதத்திற்கு பின், தற்போது வேகம் பெற உள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக, ஆந்திராவை இணைக்கும் வகையில், திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை திட்டம் 2006ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ராணிப்பேட்டை ஏறத்தாழ 180 கி.மீ., துாரம் உடைய இந்த ரயில் பாதை, திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை, தெள்ளாறு, வந்தவாசி, மாம்பாக்கம், எருமைவெட்டி, செய்யாறு, இருங்கூர், மாமண்டூர், ஆரணி, தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா சாலை சந்திப்பு, சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை வழியாக நகரி செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது. போதிய நிதி ஒதுக்காதது, நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னையால், இந்த திட்டப் பணியில் பல ஆண்டுகளாக தாமதம் ஏற்பட்டது. தற்போது, மாநில அரசு போதிய நிலம் ஒதுக்கிய பின்னரும், பணிகள் மெத்தனமாகவே நடக்கின்றன. இந்த திட்டம் துவங்கி, 19 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், 50 சதவீத பணிகளே முடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம், ஆந்திராவை இணைக்கும் முக்கியமான ரயில் திட்டம் என்பதால், முக்கியத்துவம் அளித்து, கடந்த மத்திய பட்ஜெட்டில், 347 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 1,467 ஏக்கர் இந்த திட்டத்துக்கு, 1,467 ஏக்கர் நிலம் தேவை. தற்போது மாநில அரசு, 1,260 ஏக்கர் நிலத்தை ரயில்வேயிடம் ஒப்படைத்துள்ளது. இந்த திட்டத்தில் தாமதம் ஏற்படுவதற்கு, நிலம் கையகப்படுத்துவதில் நீடித்த பிரச்னையே காரணம். இந்த பிரச்னையில், சில மாதங்களுக்கு முன்னர் தான் தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே, அடுத்தடுத்து பணிகளை விரைவுபடுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
திட்ட மதிப்பீடு ரூ.3,631 கோடியானது
திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதைக்கு, 2006ல் மொத்த திட்ட மதிப்பீடு, 582 கோடி ரூபாயாக இருந்தது. ஒவ்வொரு மத்திய பட்ஜெட்டிலும், 100 கோடி முதல் 300 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. நிலம் கையகப்படுத்தும் பிரச்னைக்கு தீர்வு காணாததால், 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட்டில் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், இந்த திட்டப் பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இதில், 19 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டதால், இந்த திட்ட மதிப்பு தற்போது, 3,631.34 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.