வீடு, கோவில்களில் வரலட்சுமி விரதம் கோலாகலம்; கணவரின் ஆயுள் வேண்டி பெண்கள் வழிபாடு
மதுரை; திருமாலின் துணைவியான மகாலட்சுமி, நமக்கு பல வரங்களைத் தருபவள். வரங்கள் தருவதால் அவள் வரலட்சுமி என்னும் திருநாமம் பெறுகிறாள். செல்வத்துக்கு அதிபதியான இவளை விரும்பாதவர்களே இல்லை. பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவள் அவளே. அவளே சீதையாக, ருக்மிணியாக பூமிக்கு வந்து வாழ்ந்து காட்டினாள். சீதையாக பிறந்த போது, தன் கணவருடன் காட்டிற்கு சென்றாள். கணவனே கண்கண்ட தெய்வமென அவரைப் பிரியாமல் வாழ்ந்தாள். பெண்கள் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இருக்கும் இந்த விரதத்தை முன்னிட்டு கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
திருமாங்கல்யம் நிலைக்க
வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோயில் மற்றும் வீடுகளில், பெண்கள் கூடி, கணவரின் ஆயுள் நீடிக்கவும், திருமாங்கல்யம் நிலைக்கவும், உலக நன்மைக்காக, வரலட்சுமி நோன்பு, வழிபாட்டை மேற்கொண்டனர். பெருமாள் கோவில், அம்மன் கோயில்களில் மற்றும் வீடுகளில் வரலட்சுமி நோன்பு கொண்டனர். நோன்பை முன்னிட்டு, பெண்கள் விரதம் இருந்து, ஒன்பது லட்சுமியை கணக்கிட்டு, ஒன்பது சுமங்கலிகள் கூடி, வரலட்சுமி நோன்பு வழிபாடும், கோயில்களில் சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது.விரதம் இருந்து வழிபாட்டில் ஈடுபட்ட பெண்களுக்கு, வழிபாட்டுக்கு பின், புதுத்துணி, வளையல், குங்குமம், பூ மற்றும் நோன்பு கயிறு (மஞ்சள் கயிறு) வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு கோயில்களில் பிரசாதமும், வீடுகளில் வழிபாட்டில் கலந்துகொண்ட பெண்களுக்கு விரதத்தை நிவர்த்தி செய்ய, பிரசாதத்துடன் உணவும் வழங்கி கொண்டாடினர்.