உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் அளித்த ரூ.20 லட்சம்; திருப்பி அனுப்பிய சங்கவி

விஜய் அளித்த ரூ.20 லட்சம்; திருப்பி அனுப்பிய சங்கவி

கரூர்: கரூரில் நடந்த த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்தவரின் மனைவி, 20 லட்சம் ரூபாயை திருப்பி அனுப்பினார். கரூர் மாவட்டம், ஆட்சிமங்கலம் கோடங்கிப்பட்டி கொங்கு நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், 35. இவர் கடந்த செப்., 27ல் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதையடுத்து, ரமேஷ் குடும்பத்திற்கு, த.வெ.க., சார்பில் 20 லட்சம் ரூபாய் வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில், த.வெ.க., சார்பில் அக்கட்சி தலைவர் விஜய் அளித்த 20 லட்சம் ரூபாயை, உயிரிழந்த ரமேஷின் மனைவி சங்கவி, 30, இந்தியன் வங்கி மூலம் த.வெ.க.,வின் வங்கி கணக்குக்கு திருப்பி அனுப்பினார். இது குறித்து, ரமேஷ் மனைவி சங்கவி கூறியதாவது: த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்த ரமேஷ் என் கணவர். இதனால் விஜய், 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கினார். முன்னதாக விஜய் வீடியோ காலில் பேசும் போது, நேரில் வந்து ஆறுதல் கூறுவதாக தெரிவித்தார்; ஆனால் அவர் வரவில்லை. மாறாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரும்படி த.வெ.க.,வினர் அழைத்தனர். ஆனால், நான் செல்லவில்லை. மகனுக்கு உடம்பு சரியில்லை. ஆனால், கணவரின் அக்கா குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் சென்றது எனக்கு தெரியாது. விஜய் நேரில் ஆறுதல் கூற வராததால், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, த.வெ.க., சார்பில் விஜய் வழங்கிய 20 லட்சம் ரூபாயை வங்கி மூலம் திருப்பி அனுப்பி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை