உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிரான்ஸ்பர் கேட்டு வராதீங்க அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

டிரான்ஸ்பர் கேட்டு வராதீங்க அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

சென்னை:''பணியிட மாறுதல் கேட்டு யாரும் என் வீட்டுக்கு வர வேண்டாம். அவ்வாறு வருவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், 946 மருந்தாளுனர்கள், 553 உதவியாளர் பணியிடங்கள், ஐந்து தொழில் வழிகாட்டி ஆலோசகர் என, 1,474 பேருக்கு நேற்று, அமைச்சர் சுப்பிரமணியன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.பின், அவர் அளித்த பேட்டி:அவரவர் சொந்த பகுதிகளிலேயே, பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பது தான் எங்களது கொள்கை. அப்போது தான், முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவர். சொந்த பகுதியில் காலியிடம் இல்லாத பட்சத்தில், கிடைக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால், அதிகாலை 5:00 மணிக்கு பணியிட மாறுதல் வேண்டி, என் வீட்டுக்கு வந்து காத்திருக்கின்றனர். இடமாறுதல்கள் துறை தலைவர்கள் வாயிலாக தான் மேற்கொள்ளப்படும் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இடமாற்றம் தொடர்பாக, யாரும் என்னை சந்திக்க வரக்கூடாது என, என் அலுவலகத்தில் அறிவிப்பு பலகை வைத்து விட்டேன். அதையும் மீறி, எனக்கு தெரிந்த யாரையாவது அழைத்துக்கொண்டு நிறைய பேர் வருகின்றனர். இங்கே பணி நியமன ஆணை பெற்றவர்கள் வந்திருக்கிறீர்கள். எனக்கு தெரிந்தவர்களை அழைத்துக்கொண்டு வந்து எனக்கு நெருக்கடி கொடுப்பது நியாயமா என்பதை சிந்தித்து பாருங்கள்.மருத்துவ துறை பணியாளர் காலியிடங்கள், 90 சதவீதம் நிரப்பப்பட்ட பின், கலந்தாய்வு நடத்தி விரும்பிய இடங்களுக்கு செல்ல வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். அதற்கு முன், இடமாறுதலுக்கு நெருக்கடி கொடுத்தால், '17பி' போன்ற துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின், 5,670 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 36,465 பேருக்கு வெளிப்படையான கலந்தாய்வு நடத்தப்பட்டுஉள்ளது. எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்லாமல் துறை ரீதியான அதிகாரிகளை சந்தித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை