| ADDED : அக் 28, 2024 07:00 AM
சென்னை: 'வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், தீபாவளி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல, தென்மேற்கு அரபிக்கடல் பகுதியிலும், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இடி, மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தீபாவளி கொண்டாடப்படும், அக்., 31 வரை இதே நிலை தொடர வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம். கேரள கடலோர பகுதி, லட்சத்தீவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.