அஜித் என்ன சொன்னாலும் அது பாராட்டுக்குரியது
சென்னை: ''கரூர் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் கூறியது, அவருடைய சொந்த கருத்து,'' என துணை முதல்வர் உதயநிதி கூறினார். சென்னை தீவுத்திடலில் மாரத்தான் ஓட்டப் போட்டியை, துணை முதல்வர் உதயநிதி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். அவர் அளித்த பேட்டி: தேர்தல் நடக்கிற மாநிலங்களில், பா.ஜ.,வுக்கு பாதகமாக இருக்கக்கூடிய ஓட்டுகளை நீக்கக்கூடிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பா.ஜ., வெல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை பயன்படுத்தி, வெற்றி பெற நினைக்கின்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன், அனைத்து அதிகாரிகளையும் வரவழைத்து, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். இந்த ஆண்டு பருவ மழையை எதிர்கொள்ள, பல்வேறு முன்னேற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. பொதுப்பணித் துறை, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் களத்தில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இன்னும் மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். பொது மக்களின் குறைகள் உடனே தீர்க்கப்படுகின்றன. அரசு சார்பில் வேலைகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக, அமைச்சர் நேரு பதில் சொல்லி விட்டார். இதை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளோம். கரூர் சம்பவம் தொடர்பாக, உண்மையாக யார் பேட்டி கொடுக்க வேண்டுமோ, அவரை ஊடகங்கள் இன்னும் பேட்டி எடுக்கவில்லை. அவர் பேட்டி கொடுக்க விரும்பவில்லையா என தெரியவில்லை. கரூர் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை ந டந்து வருகிறது. அதனால், நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. நடிகர் அஜித் கூறியது, அவருடைய சொந்த கருத்து, அதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை. அவர் எது கூறினாலும், அது பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.