காலி கூடாரமாகும் கல்வித்துறை பள்ளி திறப்புக்கு முன்பு நிரப்பப்படுமா?
மதுரை:'கல்வித்துறையில் சி.இ.ஓ., - டி.இ.ஓ., தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பொதுத் தேர்வு தேர்ச்சி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டும்' என ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.சென்னை, மதுரை, ராணிப்பேட்டை மாவட்ட சி.இ.ஓ., பணியிடங்கள் பல நாட்களாக காலியாக உள்ளன - கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். மேலும் 60 டி.இ.ஓ.,க்கள், அரசு உயர்நிலையில் 400, மேல்நிலையில் 100க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் ஆறு மாதங்களாக காலியாக உள்ளன.இதுதவிர 1,000க்கும் மேற்பட்ட தொடக்க பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களையும் நிரப்ப முடியாமல் இழுத்தடிக்கப்படுகிறது. வழக்குகள் இருப்பினும் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய அதிகாரிகள் ஆர்வம் காட்டி பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தினர்.ஆனால், அரசு நடுநிலை, தொடக்க பள்ளிகளில் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டுவந்து தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் ஆர்வம் காட்டுவதில்லை.காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து அக்.,7ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் குறைந்தபட்சம் ஆய்வு அதிகாரிகளான சி.இ.ஓ., - டி.இ.ஓ.,க்கள் பணியிடங்களையாவது நிரப்ப முன்வர வேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது.ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:மதுரை சி.இ.ஓ., பணியிடம் செப்., 11 முதல் காலியாக உள்ளது. இதுவரை சி.இ.ஓ., பணியிடம் இவ்வளவு நாட்கள் காலியாக இருந்ததே இல்லை. காலாண்டு தேர்வு முடிந்துள்ள நிலையில் டிச., 14ல் அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். தற்போது 60 சதவீத பாடங்களை நடத்தியுள்ள நிலையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அரையாண்டு தேர்வை முழு பாடங்களுக்கும் எழுத வேண்டும்.இதற்கு ஆய்வு அதிகாரிகளான சி.இ.ஓ., - டி.இ.ஓ.,க்களின் கண்காணிப்பு அவசியம். அப்போது தான் தேர்ச்சியை எதிர்பார்க்க முடியும். ஆனால் அதையெல்லாம் அமைச்சரோ, அதிகாரிகளோ கண்டுகொள்வதாக தெரியவில்லை.பல 'பைல்'கள் அமைச்சர் அலுவலகத்தில் தேங்கி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. துறை ரீதியான குறைபாடுகளை அமைச்சர், அதிகாரிகள் கவனத்திற்கு சங்கங்கள் கொண்டு சென்றாலும் நடவடிக்கை இல்லை. இது இத்துறைக்கு ஏற்பட்ட சோதனை. எப்போது தீரும் என தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.