ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்கால கணக்கெடுப்பு துவக்கம்
ஆனைமலை புலிகள் காப்பகம், நான்கு வனச்சரகங்களில், 53 நேர்கோட்டு பாதைகள் தேர்வு செய்யப்பட்டு, குளிர்கால கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவங்கியது.திருப்பூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உடுமலை, அமராவதி, கொழுமம் மற்றும் வந்தரவு ஆகிய வனச்சரகங்கள் உள்ளது.இந்த வனச்சரகங்களில், இந்திய புலிகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, குளிர்கால கணக்கெடுப்பு நேற்று துவங்கியது.நான்கு வனச்சரகங்கள், 34 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு, 53 நேர்க்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.இப்பாதைகளில், முதல் மூன்று நாட்கள் சுற்றுகளிலுள்ள நேர்க்கோட்டு பாதையில் நடந்து சென்று, நேரடியாக காணப்படும் இரை விழுங்கி விலங்குகளையும், அதே பாதையில் திரும்பி வரும் போது, 400 மீ., இடைவெளியில், தாவர வகைகளையும், கணக்கெடுத்து, பதிவு செய்கின்றனர்.வரும், 11ம் தேதி இரை விழுங்கி விலங்குகள் நேரடி கணக்கெடுப்பு, தாவரங்கள், மனித இடையூறுகள் குறித்து பதிவு செய்யப்பட உள்ளது.வரும், 14ல், கணக்கெடுக்கப்பட்ட வன உயிரினங்களின் தரவுகளின் விபரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்க உள்ளனர்.நேற்று உடுமலை, அமராவதி, கொழுமம் மற்றும் வந்தரவு ஆகிய நான்கு சரகங்களிலும், சம்பந்தப்பட்ட வனச்சரக அலுவலர்கள் தலைமையில், கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. பொள்ளாச்சி
ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி மற்றும் உலாந்தி வனச்சரகங்கள் உள்ளன.களப்பணியாளர்களுக்கான பயிற்சி முகாம், அட்டக்கடி பயிற்சி மையத்தில் வனத்துறை அதிகாரிகள் வாயிலாக நடத்தி முடிக்கப்பட்டன.அவ்வகையில், நேற்று, முதல் கணக்கெடுப்பு பணிகள் துவக்கப்பட்டன. குறிப்பாக, நான்கு வனச்சரகங்களில், 62 நேர்கோட்டு பாதைகள் அமைத்து, ஒரு நேர்கோட்டு பாதைக்கு நான்கு வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள், தன்னார்னவலர்கள் என, மொத்தம், 248 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதில், வனவிலங்குகளின் கால்தடம், எச்சம் மற்றும் நேரில் பார்த்த வனவிலங்குகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஜி.பி.எஸ்., கருவிகள் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது.இப்பணி தொடர்ந்து எட்டு நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. கணக்கெடுப்பு புள்ளி விபரங்கள், தேசிய புலிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். - நிருபர் குழு -