| ADDED : ஜூலை 17, 2011 01:03 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே பெண்ணை பலாத்காரம் செய்தவரை கைது செய்யக்கூறி கிராமமக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். தேனி மாவட்டம், கோயில்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சி (24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமானவர். இவர் நேற்று முன்தினம் தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி சென்று விட்டு ஊருக்கு திரும்பினார். முந்திரிதோப்பு அருகே சென்றபோது கரட்டுப்பட்டியைச்சேர்ந்த பாண்டியன் மகன் கரிகாலன்(28), இவரை பலாத்காரம் செய்துள்ளார். அவரிடம் இருந்து தப்பிய இவர் மெயின்ரோட்டிற்கு வந்து கூச்சலிடவே, கரிகாலன் தலைமறைவானார். க.விலக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.
முற்றுகை: போலீசார் நடவடிக்கையை தாமதப்படுத்துவதாக கூறி கிராமமக்கள் நேற்று காலை க. விலக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். டி.எஸ்.பி., விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார், கரிகாலனை கைது செய்தனர். தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மீனாட்சி சிகிச்சை பெற்று வருகிறார்.