மகளிர் காங்., தலைவர்கள் தன்னிச்சையாக மாற்றம்; மாவட்ட தலைவர்கள் அதிருப்தி
மதுரை : தமிழக காங்கிரசில் மாவட்ட தலைவர்களுக்கு தெரியாமல், 19க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மகளிர் காங்., தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதனால், 'கட்சி நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைக்க மாட்டோம்' என மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். இது, கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் காங்., மாநில தலைவராக சையத் ஹசினா ஓராண்டுக்கு முன் நியமிக்கப்பட்டார். பின், மகளிர் காங்., கலைக்கப்பட்டு, புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்த அகில இந்திய தலைமை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு, மகளிர் அணியில் தலைவர் பதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம், சிதம்பரம், சேலம், வேலுார், திருச்சி, மதுரை, நாகர்கோவில், விருதுநகர் உட்பட 19 மாவட்டங்களில் மகளிர் அணிக்கு புதிய தலைவர்களை சையத் ஹசினா நியமித்துள்ளார். இந்த நியமனங்கள் எதுவும், காங்., மாவட்ட தலைவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர்கள், மகளிர் காங்கிரசார் தன்னிச்சையாக நியமித்த புதிய தலைவர்களை கட்சி நிகழ்ச்சிக்கு அழைக்க மாட்டோம் என போர்க்கொடி துாக்கிஉள்ளனர். இது குறித்து, மாவட்ட காங்., தலைவர்கள் கூறியதாவது: கட்சியின் சார்பு அமைப்பான மகளிரணிக்கு, புதிய பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்றால், அது குறித்து மாவட்ட தலைவர்களிடம் ஆலோசிக்க வே ண்டும். ஆனால், தற்போதைய தலைவர் சையத் ஹசினா, 77 மாவட்ட தலைவர்களில் ஒருவரைக் கூட ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நியமித்துள்ளார். அவர் நியமித்துள்ள தலைவர்கள் ஒரு போராட்டத்தில் கூட பங்கேற்றதில்லை. கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் சேர்த்தனர் என்ற அடிப்படையில் பதவி வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர் சேர்க்கையின் உண்மைத்தன்மை என்ன என்பது எல்லாருக்கும் தெரியும். புதிதாக நியமிக்கப்பட்டவர்களை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அவற்றில் எதிலுமே, மாவட்ட தலைவர்கள் படம் கிடையாது. அப்படி இருக்கும்போது, அவர்களை நாங்கள் ஏன் அனுசரிக்க வேண்டும்? கட்சி நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைக்க மாட்டோம். இதை, காங்., மாநில தலைமைக்கும் தகவல் தெரிவித்துவிட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். சையத் ஹசினா தரப்பில் கூறுகையில், 'புதிய உறுப்பினர் சேர்க்கையை முறையாக நடத்தி, அதிக உறுப்பினர்களை சேர்த்தவர்களுக்கு தலைவர் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புரளி பேசுபவர்கள், வீட்டில் இருந்து அலைபேசியில் அரசியல் செய்பவர்கள், கட்சிப் பணியை சரியாக கவனிக்காதவர்கள் மகளிரணியில் இருந்து களை எடுக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய தலைமை முடிவின்படி இந்த மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது' என்றனர்.