தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்தம் ஆசியான் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்து
கோலாலம்பூர்: மலேஷியாவில் நேற்று துவங்கிய 'ஆசியான்' உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில், தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையே விரிவுபடுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' அமைப்பில், இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் உட்பட, 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. கையெழுத்து இந்த ஆண்டு ஆசியான் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு மலேஷியா வசம் உள்ளது. நாம் இந்த அமைப்பின் முக்கிய நட்பு நாடாக உள்ளோம். மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில்நேற்று துவங்கிய இந்த அமைப்பின் உச்சி மாநாடு நாளையுடன் நிறைவு பெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று மலேஷியா வந்தார். இரண்டாவது முறை அதிபராக பதவியேற்ற பின் அவரது முதல் ஆசிய பயணம் இது. உச்சி மாநாட்டில் மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் பிற ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த உச்சி மாநாட்டு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்தத்தை விரிவுபடுத்தும் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. எல்லை பிரச்னை காரணமாக இந்த இரு நாடுகளுக்கிடையே ஜூலையில் மோதல் துவங்கியது. ஐந்து நாட்கள் நீடித்த சண்டையில் இரு தரப்பிலும் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போது அதிபர் டிரம்ப் இரு நாட்டு பிரதமர்களிடம் பேசி பேச்சு நடத்த அழைப்பு விடுத்தார். அதன்பின் மலேஷியாவில் இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்து முதல் நிலை போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். புதிய நாடு இந்நிலையில், ஆசியான் மாநாட்டின் ஒரு பகுதியாக 'அமைதியை பரப்புவோம்' என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் தாய்லாந்து மற்றும் கம்போடியா நாட்டு பிரதமர்கள் விரிவுபடுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த அதிபர் டிரம்ப், இதை 'வரலாற்று சிறப்புமிக்க நாள்' என்று குறிப்பிட்டார். இந்த உச்சி மாநாட்டில் ஆசியானின் புதிய உறுப்பு நாடாக கிழக்கு தைமூர் சேர்க்கப்பட்டது. 1990க்கு பின் ஆசியானில் நடந்துள்ள முதல் விரிவாக்கம் இது. இதையடுத்து உச்சி மாநாட்டில் கிழக்கு தைமூரின் கொடியும் வைக்கப்பட்டது. தீவு நாடான கிழக்கு தைமூரின் மொத்த மக்கள் தொகை 15 லட்சம் மட்டுமே. அதில் 42 சதவீதத்தினர் கடும் வறுமையில் தவிக்கின்றனர். கிழக்கு தைமூர் இணைப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் குஸ்மாவ் கூறுகையில், “இந்த இணைப்பு எங்களுக்கு வர்த்தகம், முதலீடு, கல்வி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வாய்ப்புகளைத் தரும். நாங் கள் கற்றுக்கொள்ளவும், புதுமைகள் புரியவும், நல்லாட்சி நடத்தவும் தயார்,” என்றார். ஆசியான் மாநாட்டுக்கு இடையே தாய்லாந்து, கம்போடியா மற்றும் மலேஷியாவுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பொருளாதார ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டார். அதில் சில ஒப்பந்தங்கள் அரியவகை கனிமங்கள் ஏற்றுமதி தொடர்பானவை. சீனா இந்த வகை கனிமங்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், அமெரிக்கா மாற்று வழிகளை தேடி வருகிறது.
2026 ஆசியான் - இந்தியாவுக்கான
கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டு
''சர்வதேச நாடுகளின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு சக்திவாய்ந்த அடித்தளமாக இந்தியா - ஆசியான் நாடுகளுக்கு இடையேயான நட்புறவு உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி ஆசியான் உச்சி மாநாட்டில் கூறினார். இந்த மாநாட்டில், வீடியோ கான்பரஸ் வாயிலாக பங்கே ற்ற பிரதமர் மோடி பேசியதாவது: சர்வதேச அளவில் தற்போது நிலையற்ற சூழல் நிலவுகிறது. எனினும் இந்தியா - ஆசியான் நாடுகள் இடையேயான உறவு நிலையாக வளர்ந்து வருகிறது. இந்த உறவு, சர்வதேச அளவில் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு சக்தி வாய்ந்த அடித்தளத்தை அமைக்கிறது. இதன் வாயிலாக கடல்சார் ஒத்துழைப்புக்கான ஆசியான் - இந்தியா ஆண்டாக வரும் 2026 அமையும். கல்வி, சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம், பசுமை எரிசக்தி மற்றும் சை பர் பாதுகாப்பு துறைகளில் நம்மிடையே வலுவான ஒத்துழைப்பு அமைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.