உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெளிப்படைத்தன்மையை மீறும் மெட்டா, டிக் டாக்: ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு

வெளிப்படைத்தன்மையை மீறும் மெட்டா, டிக் டாக்: ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புருஸ்ஸல்ஸ்: வெளிப்படைத்தன்மைக்கான விதிகளை சமூக வலைதள நிறுவனங்களான மெட்டா மற்றும் டிக் டாக் ஆகியன மீறி உள்ளதாக ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டியுள்ளது. இதனால், அந்த நிறுவனங்கள் கோடிக்கணக்கில் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.உலகளவில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இதனை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து, இதனை பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக இருக்கவும், வெறுப்பு பேச்சு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தகவல்கள் குறித்தும், பயங்கரவாத தகவல்கள் தொடர்பாக புகார் அளிக்கவும் தேவையான நடவடிக்கைளை எடுப்பதற்கு என ஐரோப்பிய கமிஷன் டிஜிட்டல் சேவை சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.இந்நிலையில், மெட்டா நிறுவனமும், டிக் டாக் செயலியும் இந்த சட்டத்தை மீறியுள்ளதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த குறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஐரோப்பிய யூனியனின் தொழில்நுட்ப இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஜனநாயகப்பிரிவின் நிர்வாக துணைத்தலைவர் ஹென்னா விர்குன்னன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஐரோப்பிய யூனியனின் சட்டப்படி, சமூக வலை தளங்கள், தங்களின் பயனர்கள் மற்றும் சமூகத்துக்கு பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். நமது ஜனநாயகம் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், பயனர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதுடன், அவர்களின் உரிமையை மதிக்க வேண்டும். ஆய்வுக்கு தங்களது அமைப்பை வெளிப்படையாக வைக்க வேண்டும். இதனை டிஜிட்டல் சேவை சட்டம் கடமையாக வைத்துள்ளது. தேர்வாக வைக்கவில்லை.சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களின் தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் அணுக அனுமதிப்பது என்பது, டிஜிட்டல் சேவை சட்டப்படி, அத்தியாவசியமான விதிமுறைகள் ஆகும். இது பயனர்களின் மனம் மற்றும் உடல்நிலையை ஏற்படுத்தும் தாக்கம் குறித்த தகவல்களை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் மெட்டா மற்றும் டிக் டாக் மீது இந்த அமைப்பு விசாரணை நடத்தியது. இதில், அந்த நிறுவனங்கள் தங்களது தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் அணுகுவதை தடை செய்தது தெரியவந்தது. குழந்தைகள் பாலியல் தகவல்கள் மற்றும் பயங்கரவாதம் அடங்கிய தகவல்கள் குறித்து புகார் அளிப்பதற்கு மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியன எளிதானதாக வைத்திருக்கவில்லை எனவும், குழப்பத்தை ஏற்படுத்துவதை போலவும் அந்த நிறுவனங்கள் செயல்படுவதாகவும் விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இந்த அறிக்கை அடிப்படையில், இரண்டு நிறுவனங்கள் மீதும் ஐரோப்பிய யூனியன் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து இரண்டு நிறுவனங்களும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. அதேநேரத்தில், மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்த குற்றச்சாட்டு தவறானது, ஐரோப்பிய யூனியனுடன் பேசுவோம் எனத் தெரிவித்துள்ளது.டிக்டாக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
அக் 25, 2025 06:38

அவர்களுக்கு உங்களது தனிப்பட்ட தகவல் மிக முக்கியம். அதை பெற அணைத்து வித டகால்டி வேலைகளையும் பார்ப்பார்கள்.,


மணிமுருகன்
அக் 24, 2025 23:09

சமுக வளைத்தளங்கள் என்ற பெயரில் சூதாட்ட வளைதளங்களாகத் தான் உருவாகி உள்ளது பொழுதுபோக்கு என்ற பெயரில் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதோடு அவர்களை பல வழிகளில் சிக்க வைத்து ஏமாற்றகிறது மக்கள் தங்களை அறியாமல் ஒரு மோகத்தில் மயங்கி மாட்டுகின்றனர் அவர்களை அறியாமல் இதனால் பல சீர்கேடுகள் உருவாகுகிறது என்பது உண்மையே மக்களுக்கு எச்சரிக்கை உணர்வு வரவேண்டும்


தாமரை மலர்கிறது
அக் 24, 2025 19:30

உலக அளவில் ஐடி ஊழியர்களில் முக்கால்வாசி பேர் இந்தியர்கள். இருந்தும் இந்தியாவிற்கென தனி வலைத்தளங்கள் இல்லை என்பது அசிங்கம். இன்னும் அமெரிக்கா வலை தளங்களை இந்தியர்கள் சார்ந்திருக்க வேண்டிய நிலை அசிங்கம். சீனா மாதிரி இந்தியாவிற்கென அரட்டை போன்ற தளங்களை உருவாக்க வேண்டியது அவசியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை