உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தொடர் போராட்டத்தால் நெருக்கடி; இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு

தொடர் போராட்டத்தால் நெருக்கடி; இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு

இஸ்லமாபாத்: தொடர் போராட்டம் காரணமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்றம் செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் 2018 - 2022 வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இவர், பெரும்பான்மை இல்லாததால், 2022 ஏப்ரலில் பிரதமர் பதவியை இழந்தார். புதிதாக பதவியேற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, இம்ரான் கான் மீது, 100க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்தது.ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்டு, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் முதல், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார். நீதிமன்ற ஆணை இருந்தும், இம்ரான் கானை சந்திக்க அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இம்ரான் கான் சித்ரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் பரவின. ஆனால், அடியாலா சிறை நிர்வாகம் அதை திட்டவட்டமாக மறுத்தது. இதனிடையே, சிறை நிர்வாகம் மற்றும் பாகிஸ்தான் அரசைக் கண்டித்து தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியினர் சிறை முன்பாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பிறகு, சிறையில் உள்ள இம்ரான் கானை, அவரது சகோதரி உஸ்மா கான் சந்திக்க அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவர் தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், முப்படை தளபதி அசிம் முனீர் தான் இம்ரான் கானுக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணம் என்று குற்றம்சாட்டினார்.நேற்று முன்தினம் இம்ரான் கானை சந்திக்க அனுமதி மறுத்த சிறை நிர்வாகத்தைக் கண்டித்து அவரது சகோதரி, வழக்கறிஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிறை வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கலைக்குமாறு சொல்லியும், அவர்கள் கலைந்து போக மறுத்தால், தண்ணீரை பீய்த்து அடித்தனர். மேலும், அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில், தொடர் போராட்டம் காரணமாக, அடியாலா சிறையில் இருந்து, இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்றம் செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டோக் மாவட்ட சிறைக்கு அவரை மாற்றவே, அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ