ஜாவலின் ஏவுகணை; எக்ஸ்காலிபர் குண்டுகள் இந்தியாவுக்கு வழங்குகிறது அமெரிக்கா
நியூயார்க்: சக்திவாய்ந்த இரண்டு முக்கிய ராணுவ தளவாடங்களை நம் நாட்டிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒத்துழைப்பு அதிக அளவில் அமெரிக்கா வரி விதித்துள்ளது. இதற்கிடையே, பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முயற்சி நடந்து வருகிறது. இதற்கிடையே, இந்தியாவுக்கு இரண்டு முக்கிய ராணுவ ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது. ராணுவப் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பின் மூலம், இதற்கான அறிவிப்புகளை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 100 எப்.ஜி.எம்., - 48 'ஜாவலின்' ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளன. இதன் மதிப்பு, 405 கோடி ரூபாய். அடுத்ததாக, 417 கோடி ரூபாய் மதிப்பில் ஜி.பி.எஸ்., எனப்படும் இருப்பிடத்தைக் காட்டும் தொழில்நுட்பத்துடன் துல்லியமாக இலக்கை தாக்கும் திறன் கொண்ட 216 'எக்ஸ்காலிபர்' பீரங்கி குண்டுகள் வாங்கப்பட உள்ளன. அதிகரிக்கும் இந்த ஆயுதங்கள் இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும். இந்திய ராணுவத்தின் துல்லியத் தாக்குதல் திறனை பல மடங்கு அதிகரிக்கும் என, அமெரிக்கா கூறி உள்ளது. இந்தியா ஏற்கனவே சிறிய அளவில் ஜாவலின் மற்றும் எக்ஸ்காலிபர் ஆயுதங்களைப் பயன்படுத்தி வருவதால், இந்த புதிய கொள்முதல், படைப் பிரிவுகளை விரிவாக்க உதவும் என்று நம் ராணுவ அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
'ஜாவலின்' ஏவுகணை
அமெரிக்காவின் 'ரேடியான்' மற்றும் 'லாக்ஹீட் மார்ட்டின்' நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், உலகின் மிகச்சிறந்த நவீன ஏவுகணை. எதிரிகளின் பீரங்கிகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. ஒரு வீரரால் தோளில் சுமந்து சென்று ஏவும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏவிய பின் தானாகவே இலக்கைத் துரத்தி தாக்கும். இதனால், வீரர் உடனடியாக மறைவிடத்துக்கு செல்லலாம். கட்டடத்தில் இருந்தும் ஏவ முடியும். இரவு - பகல், மழை - பனி, புகை - துாசி எதுவாக இருந்தாலும் துல்லியமாகச் செயல்படும் திறன் கொண்டது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போரில் ரஷ்ய கவச வாகனங்களை அழித்து பிரபலமடைந்த ஒரு ஏவுகணை.
'எக்ஸ்காலிபர்' பீரங்கி குண்டு
'எக்ஸ்காலிபர்' என்பது ரேடியான் தயாரிக்கும் ஜி.பி.எஸ்., எனப்படும் இருப்பிடத்தைக் காட்டும் தொழில்நுட்பத்துடன் துல்லியமாக இலக்கை தாக்கும் திறன் கொண்ட நீண்ட தொலைவு பீரங்கி குண்டுகள். எதிரிகள் ஜி.பி.எஸ்., சிக்னலை இயங்கவிடாமல் செய்து, துல்லியமாக தாக்கும். சாதாரண குண்டு, 20 முதல் 25 கி.மீ. துாரம் சென்றால், 'எக்ஸ்காலிபர்' 50 கி.மீ., துாரம் வரை செல்லும் திறன் கொண்டது. ஒரு எக்ஸ்காலிபர் குண்டு பல சாதாரண குண்டுகளுக்கு சமம். ஒரே குண்டில் இலக்கை அழித்துவிடும் என்பதால் வெடிமருந்து செலவு மிகக்குறைவு. நகர்ப்புறப் போரிலும், எல்லைப் பகுதியிலும் பாதுகாப்பாக பயன் படுத்தலாம்.