பாங்காக்: மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 2,000 ஆக அதிகரித்துள்ளது. கட்டட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 2021 பிப்ரவரியில், ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அப்போது முதல் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், மியான்மரின் சகாயிங் நகரின் வடமேற்கே, நேற்று முன்தினம், 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 12 நிமிடங்களில், 6.4 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தின் பாங்காக்கிலும் உணரப்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. வானுயர்ந்த கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. பாலங்கள், அணைகள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2,376 பேர் காயமடைந்து உள்ளதாகவும், 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மியான்மரில் ஆளும் ராணுவம் தெரிவித்துஉள்ளது. முழு வீச்சில் மீட்பு
இந்த நிலநடுக்கத்தால், தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் படையினர் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நய்பிடா விமான நிலையத்தில் தகவல் தொடர்பு கோபுரம் இடிந்து விழுந்ததால், விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், யாங்கூன் நகருக்கு விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டட இடிபாடுகளால், மியான்மர் முழுதும் கான்கிரீட் குவியலாக காட்சியளிக்கிறது. இடிபாடுகளை தோண்டத் தோண்ட உடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது. தாய்லாந்து
மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம், அதன் அண்டை நாடான தாய்லாந்தின் பாங்காக்கிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தால், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 26 பேர் காயமடைந்து உள்ளதாகவும், 47 பேரை காணவில்லை என்றும் பாங்காக் அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தாய்லாந்தில் உயிர்சேதத்தை விட, பொருட்சேதம் தான் அதிகம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மருக்கு, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேஷியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி உள்ளன. இந்த நாடுகளின் சார்பில் மியான்மருக்கு மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆப்பரேஷன் பிரம்மா
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு உதவும் வகையில், நம் நாட்டிலிருந்து, 15 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 'ஆப்பரேஷன் பிரம்மா' என்ற பெயரில், விமானப்படைக்கு சொந்தமான 'சி 130 ஜே' விமானம் வாயிலாக தற்காலிக கூடார துணிகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள், பிரட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், சோலார் விளக்குகள், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், ஜெனரேட்டர் செட்டுகள், அத்தியாவசிய மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. உத்தர பிரதேசத்தின் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து மேலும் இரண்டு விமானங்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.'ஆப்பரேஷன் பிரம்மா வாயிலாக அனுப்பப்பட்ட முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் மியான்மரின் யாங்கூன் விமான நிலையம் சென்றடைந்தது' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பேசிய மோடி
மியான்மர் அரசின் தலைவரும், ராணுவ ஜெனரலுமான மின் ஆங் ஹிலாங்கிடம், பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். தன் 'எக்ஸ்' தளத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், 'நிலநடுக்கம் குறித்து ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹிலாங்கிடம் பேசினேன். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தேன். 'இந்த கடினமான நேரத்தில் மியான்மர் மக்களுக்கு இந்தியா உறுதுணையாக நிற்கும் என, அவரிடம் உறுதியளித்தேன்' என, குறிப்பிட்டுள்ளார்.
மியான்மர் விரைவு
மீட்பு பணிக்காக இந்திய கடற்படையின் இரண்டு கப்பல்கள் மியான்மர் விரைந்துள்ளன. மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி வழங்கும் வசதிகளுடன் கூடிய, தற்காலிக மருத்துவமனை அமைப்பு ஒன்றும் விமானப்படை விமானம் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்தக் குழுவில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ நிபுணர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் இருப்பர். இந்த நிலநடுக்கத்தால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் யாரும் உயிரிழந்ததாக இதுவரை தகவல் இல்லை. இதை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீப் ஜெய்ஸ்வால், நேற்று றுதி செய்தார்.
படையினர்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 80 பேர் மியான்மருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கு தேவையான உபகரணங்களுடன், கமாண்டன்ட் பி கே திவாரி தலைமையில் இரண்டு விமானப்படை விமானங்களில் வீரர்கள் புறப்பட்டு சென்றனர். மியான்மர் சென்றடைந்த அவர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.