3 வீரர்களுடன் பூமியில் தரையிறங்கிய விண்கலம்
மாஸ்கோ: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து, இரு ரஷ்ய வீரர்கள் மற்றும் அமெரிக்க வீரர் ஒருவருடன் பூமிக்கு புறப்பட்ட, 'சோயுஸ் காப்ஸ்யூல்' என்ற விண்கலம், கஜகஸ்தானில் நேற்று தரையிறங்கியது.சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய விண்வெளி வீரர்கள் ஒலெக் கொனோனென்கோ, நிகோலாய் சப் மற்றும் அமெரிக்க விண்வெளி வீராங்கனை டிரேசி டைசன் ஆகியோருடன், ரஷ்யாவின், 'சோயுஸ் காப்ஸ்யூல்' விண்கலம் சமீபத்தில் பூமிக்கு புறப்பட்டது.இந்நிலையில், மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், 'பாராசூட்' உதவியுடன் விண்கலம் நேற்று தரையிறங்கியது. அதிலிருந்து வெளியே வந்த வீரர்களுக்கு, அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.