| ADDED : நவ 22, 2024 04:30 PM
கொழும்பு: இலங்கையில் இனவாதத்திற்கு இடமில்லை ,'' என அந்நாட்டு அதிபர் அனுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்இலங்கை பார்லிமென்டிற்கு கடந்த 14ம் தேதி நடந்த தேர்தலில், அதிபரின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 149 இடங்களில் வெற்றி பெற்றது. புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். நேற்று இலங்கை பார்லிமென்டில் அனுர குமார திசாநாயக்க உரையாற்றினார்.இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நமது நாட்டின் அரசியல் கட்டமைப்பும், அரசியல் அதிகாரத்தின் அடிப்படைகளும் பெரும்பாலும் பிராந்திய, இன மற்றும் மதத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு உள்ளன என்று நான் நம்புகிறேன். இவ்வாறான அரசியல் பிரிவுகள், சமூகங்களுக்கு இடையே பிரிவினையை அதிகரித்தன. குழுக்களுக்கு இடையே சந்தேகமும், நம்பகத்தன்மையும் அதிகரித்தது. நாட்டின் அனைத்து பகுதிகளில் உள்ள சமூகத்தினர் நம் மீது நம்பிக்கை வைத்து அதிகாரத்தை அளித்து உள்ளனர். அதேபோல், எங்கள் மீது நம்பிக்கை வைக்காமல், பிற அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வைத்த மக்கள் உள்ளனர். ஜனநாயகத்தில் அவர்களும் நம்மில் ஒருவர் தான்.ஜனநாயகத்தின் அடிப்படை இதுதான். அனைத்து மக்களையும், ஒரே கட்சி அல்லது ஒரே கொள்கையின் கீழ் ஒன்று சேர்ப்பது ஜனநாயகம் அல்ல. ஜனநாயகத்தின் சாரம்சம் என்பது, பல்வேறு அரசியல் சித்தாந்தங்கள் மற்றும் குழுக்களின் செயல்பாட்டில் உள்ளது.ஜனநாயக நாடாக, நாங்கள் ஒரே கட்சி ஆட்சிக்கு ஆதரவாக இல்லை. மாறாக பல கட்சி அரசியலை நமது ஜனநாயக கட்டமைப்பின் அடிப்படை கட்டமைப்பாக ஏற்றுக் கொள்கிறோம். குறிப்பிட்ட அளவு மக்கள் எங்களுக்கு ஆதரவாக ஓட்டுப் போடவில்லை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். குடிமக்கள் எங்களுக்கு ஓட்டுப் போட்டனரா அல்லது இல்லையா என பார்க்காமல் அனைத்து தரப்பினரின் தேவையை பூர்த்தி செய்வதும், விருப்பங்களை நிறைவேற்றுவதும் எங்களின் ஜனநாயக கடமை.நாட்டின் அனைத்து குடி மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். எங்களின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் ஓட்டுப்போட்டு உள்ளனர். இனிமேல் மக்களுக்கு சேவை செய்வது என்ற எங்களின் கடமையை நிறைவேற்றுவோம்.மக்களின் நலனுக்கு எப்போதும் உறுதி செய்யப்படும். பலதரப்பட்ட அரசியல் கருத்துக்களை கொண்டு இருந்தாலும் நாட்டை பிளவுபடுத்தும் இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதி அளிக்கிறேன். எந்த விதமான மத பயங்கரவாதமும் வேரூன்ற அனுமதிக்கப்படாது. இனக்கலவரங்களினால் நமது நாடு துன்பங்களை அனுபவித்து வருகிறது. இந்த மண் போதுமான அளவு ரத்தத்தால் நனைத்துள்ளது. எண்ணற்ற மக்களின் கண்ணீர் ஆறுகள் போல் ஓடின. சமூகங்களுக்கு இடையில் அவநம்பிக்கை, சந்தேகம் மற்றும் கோபம் ஆகியவை ஆபத்தான நிலைக்கு வந்துள்ளன.நமது வருங்கால சந்ததியினர் இத்தகைய துன்பம் அற்ற நாட்டை பெறுவதை உறுதி செய்வது நமது கடமை. இதுபோன்ற அவலங்கள் மீண்டும் நிகழாத நிலையை உருவாக்க நாம் கடமைப்பட்டு உள்ளோம்.இந்த நாட்டில் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு தேசியவாத அல்லது மதம் தொடர்பான கோஷங்களை பயன்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் அனுர குமார திசநாயக்க கூறியுள்ளார்.