UPDATED : மே 23, 2025 05:51 AM | ADDED : மே 23, 2025 05:50 AM
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் நியூஸ் சவுத் வேல்ஸ் நகரத்தில், 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின் முக்கிய சுற்றுலா நகரமான சிட்னிக்கு வடக்கே அமைந்துள்ளது, நியூஸ் சவுத் வேல்ஸ் நகரம். இங்கு கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் டாரி, கெம்ப்சி, போர்ட் மெக்குவாரி, காப்ஸ் ஹார்பர் மற்றும் பெல்லிங்கன் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. டாரி நகரில் மட்டும் ஒரு மாதத்திற்கு பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்தது. தொடர் கனமழையால், நியூஸ் சவுத் வேல்ஸில் ஏராளமான நீர்நிலைகள் நிரம்பி, வெள்ளம் குடியிருப்புகளை நோக்கி பாய்ந்தது. நுாற்றுக்கணக்கான வீடுகளும், சாலைகளும் நீரில் மூழ்கின. 500க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கினர். வீடுகளின் மேல்பகுதியிலும், பாலங்களிலும் அவர்கள் தஞ்சம் அடைந்தனர். ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி அவர்களை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.
வெள்ளத்தில் மூழ்கி இருவர் உயிரிழந்த நிலையில், சாலையில் பயணித்த இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த, 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.