| ADDED : செப் 09, 2025 06:56 AM
கீவ்: ''ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அதிகளவில் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூடுதல் வரி விதித்தது சரியான யோசனை,'' என, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், மூன்று ஆண்டுகளைத் தாண்டியும் தொடர்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல முயற்சிகள் எடுத்தும் பலன் கிடைக்கவில்லை . இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தியுள்ளார். இதில் 25 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அபராதம் என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் நடவடிக்கை நியாயமற்றது என்று இந்தியா தெரிவித்திருந்தது. மேலும், உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது, அமெரிக்காவின் வரி விதிப்பு யோசனை சரியானது தான். ஐரோப்பிய நாடுகளும் இதில் விதிவிலக்கல்ல. ரஷ்ய அதிபர் புடின் மீது கூடுதல் அழுத்தம் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில ஐரோப்பிய நாடுகள், தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குகின்றன; இது நியாயமில்லை.ரஷ்யாவிடம் இருந்து எந்த வகையான எரிபொருளையும் வாங்குவதை நாம் நிறுத்த வேண்டும். ரஷ்யாவுடன் தொ டர்ந்து ஒப்பந்தங்கள் செய்யும் நாடுகள் மீது, வரிகளை விதிப்பது சரியான யோசனை. கொலையாளியை நிறுத்துவதற்கான ஒரே ஒரு வழி இதுதான். எதிராளிகளின் ஆயுதத்தை பறிப்பதுதான் சரி; எரிசக்தி தான் அவர்களுடைய ஆயுதம். என் நா டு ஏவுகணைகளால் சூழப்பட்டிருக்கும் போது, போர் நிறுத்தம் குறித்து பேச நான் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு செல்ல முடியாது; அது சாத்தியமற்றது. வேண்டுமானால், ரஷ்ய அதிபர் புடின், எங்களுடைய தலைநகர் கீவ்க்கு வரலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் போர் நிறுத்தம் குறித்து நடத்திய பேச்சினால் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதற்கு மாறாக ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வலுவான பதிலை நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.