உலக நன்மை வேண்டி ஶ்ரீ மஹா ருத்ர ஜபம்
ஸ்ரீருத்ரம் என்பது கிருஷ்ண யஜுர் வேதத்தில் உள்ள தைத்ரிய சம்ஹிதையில் நான்காம் காண்டத்தில், சிவனைத் துதித்துச் சொல்லப்படும் பெரும் அதிர்வைக் கொடுக்கக்கூடிய மஹாமந்திரம். பஞ்சாட்சர மந்திரம் (நமசிவாய) இதன் நடுவில் உள்ளது. வேதத்தில் சிறந்தது, கண்ணாய் விளங்குவது ஸ்ரீருத்ரம் ஆகும். இதன் தோற்ற காலம் வரையறுக்கப்படவில்லை. இதனை ருத்ரப்ரஸ்னா, சத்ருத்ரயா, ருத்ரத்யாய என்று பல பெயர்களில் சைவ ஆகமத்தில் குறிப்பிடுகிறார்கள். சைவ ஆகமமோ, வைணவ ஆகமமோ ஒரு கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யும்போது அது விக்னமின்றி நடைபெற ருத்ரனை அழைக்கவேண்டும். அதற்கு ஸ்ரீருத்ரம் சொல்லி ஆவாஹனம் செய்வது மரபு. புதுதில்லி விகாஸ்புரி சி பிளாக்கில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி மூகாம்பிகை திருக்கோயிலில் ஶ்ரீ மஹா ருத்ர ஐபம் மிகவும் விமரிசையாக நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, விகாஸ்புரி பிராத்தனா குழுவினர் செய்து இருந்தனர். காலை 6.00 மணிக்கு குரு வந்தனம், கணபதி ஹோமம், வரசக்தி விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மஹன்யாஸ பாராயண ஜபம், ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை, ஸிவாஷ்டோத்தரஸத நாமாவளி,மஹா ருத்ர ஹோமம், மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றது. ஐம்பதிற்கும் மேற்பட்ட ரிக் வேதிகள் இதில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவாசனம், கலச ஸ்தாபனம் நடைபெற்றது. இதையடுத்து லலிதா சகஸ்ரநாம பாராயணம் மற்றும் ஹாரத்தியுடன் மதியம் 2.00 மணிக்கு நிறைவுற்றது. பிள்ளையார், அம்பாள் மற்றும் சுப்பிரமணியர் திருவுருவங்கள் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.ஆன்மீக அன்பர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர். அனைவருக்கும் மஹா பிரசாதம் வழங்கப்பட்டது. மஹாருத்ர ஜபம் சிறந்த முறையில் நடந்தேற உதவிய அனைவருக்கும்விகாஸ்புரி பிராத்தனா குழு நிர்வாகிகள் தங்கள் நன்றியை தெரிவித்தனர். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்