உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் / கா ர்பென்டர் தொழிலில் அசத்தும் பெண்

கா ர்பென்டர் தொழிலில் அசத்தும் பெண்

துமகூரின் கொரட்டகெரே தாலுகா துவினகெரே கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாத். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு ஒரு மகன், மகள். கார்பென்டர் வேலை செய்யும் ரகுநாத்திற்கு, வேலைக்கு செல்லும் நாளில் 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. சில நாட்களில் அவருக்கு வேலை இருப்பது இல்லை. இதனால் குடும்பம் கஷ்டத்தில் இருந்தது.

உறுதுணை

கணவர் படும் கஷ்டத்தை பார்த்த லலிதா, கணவரிடம் சென்று நானும் உங்களுடன் வேலைக்கு வருகிறேன். எனக்கு கார்பென்டர் தொழில் கற்று கொடுங்கள் என்று கேட்டு இருக்கிறார். முதலில் வேண்டாம் என்று கணவர் கூறி உள்ளார். ஆனால் மனைவிக்கு வேலை மீது ஆர்வத்தை பார்த்து தன்னுடன் வேலைக்கு அழைத்து சென்று, தொழில் கற்று கொடுத்து உள்ளார். தொழிலில் நன்கு கைதேர்ந்த பின், புதிதாக கட்டப்படும் வீடுகளில் கார்பென்டர் பணிகளை ஒப்பந்தம் எடுத்து, லலிதா செய்கிறார். இதற்கு கணவரும் உறுதுணையாக உள்ளார்.இதுகுறித்து லலிதா கூறியதாவது:முதலில் நான் கார்பென்டர் வேலைக்கு சென்ற போது, எனது கணவரிடம் உறவினர்கள் சிலர், ஆண்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு உங்கள் மனைவியை அழைத்து செல்ல வேண்டாம். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படும் என்று கூறினர். ஆனால் கணவருக்கு என் மீது நம்பிக்கை இருந்தது.அனைத்து இடங்களிலும் ஆண்கள் இருப்பர். அங்கு எல்லாம் பெண்கள் வேலைக்கு செல்லாமல் இருக்க முடியுமா. என்னுடன் தானே மனைவியே அழைத்து செல்கிறேன். ஒரு பிரச்னையும் வராது என்று, உறவினர்களிடம் கூறினார்.

தன்னிறைவு

இது எனக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது. தற்போது இருவரின் வருமானம் மூலம், குடும்பம் பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறது. வீட்டில் சும்மா இருந்தோம் என்று யாரும் கூறாத வகையில், தன்னிறைவு வாழ்க்கை வாழ்வது பெருமையாக உள்ளது.வேலைக்கு சென்ற புதிதில் ஒரு மாதிரி பேசியவர்கள், இப்போது என்னை பாராட்டுகின்றனர். பெண்கள் நினைத்தால் முடியாது என்று எதுவும் இல்லை. நம்மால் முடியுமா என்ற பயத்தில், வீட்டிற்குள் இருப்பதை விட்டுவிட்டு இந்த உலகத்தை எதிர்கொள்ள, பெண்கள் தயாராக வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ