உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் /  சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி பைகள் தயாரிக்கும் பெண்

 சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி பைகள் தயாரிக்கும் பெண்

- நமது நிருபர் - பெங்களூரு ரூரல் மாவட்டம், ஹொஸ்கோட் தாலுகா நெலவகிலு கிராமத்தில் வசிப்பவர் ஜெயலட்சுமி. சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை தயாரித்து விற்பனை செய்கிறார். இதன்மூலம் தொழில் முனைவோராக உருவெடுத்துள்ள அவர், கிராமப்புற பெண்கள் வாழ்வாதாரத்திற்கும் உதவியாக உள்ளார். இதுகுறித்து, ஜெயலட்சுமி கூறியதாவது: நான் ஆரம்பத்தில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தையல் தொழிலாளியாக வேலை செய்தேன். நீண்ட நேர வேலை சுமை, குறைவான ஊதியம், வீட்டு பொறுப்புகள் என பல சவால்களை எதிர்கொண்டேன். என் ஊரான நெலவகிலு கிராமத்தில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் என்னை கவலையடைய செய்தன. பிளாஸ்டிக் கழிவுகளை மாடுகள் சாப்பிடுவதை பார்க்க வேதனையாக இருந்தது. அன்றாட தேவைகளுக்காக மக்கள் பிளாஸ்டிக் பைகளை சார்ந்திருப்பதை மாற்றி, சுற்றுச்சூழல் மாற்றத்தை ஏற்படுத்த நினைத்தேன். அந்த நேரத்தில், 'பஸ் விமன்' என்ற சமூக அமைப்பு, என் கிராமத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த அமைப்பின் உதவியுடன் தையல் இயந்திரத்தை வாங்கி, சுற்றுச்சூழலுக்கு உகந்த, 50 துணி பைகள் தயாரித்தேன். அதை என் கிராம மக்களுக்கு இலவசமாக தந்தேன். இதன்மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தினேன். என் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் கிராம மக்கள் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை கைவிட்டு, பணம் கொடுத்து என்னிடம் துணி பைகள் வாங்கி சென்றனர். இதனால் நிறைய துணி பைகள் ஆர்டர் வந்தது. அதன்மூலம் தொழில் முனைவோராக மாறினேன். தற்போது மகளிர் சுய உதவி குழுவான, 'ஸ்திரீ சக்தி' சங்கத்தின் தலைவியாக உள்ளேன். கிராமப்புற பகுதியில் வசிக்கும் பெண்கள், தொழில் முனைவோராக மாற என்னால் முடிந்த உதவிகள் செய்து ஊக்கம் அளிக்கிறேன். கிராம பஞ்சாயத்து கூட்டங்களில் பங்கேற்று, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை