தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆஷா
- நமது நிருபர் - கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருக்கு மிக அருகில் கோலார் மாவட்டம் இருந்தாலும், இங்கு கடுமையான தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இங்கு உள்ள ஏரிகளுக்கு சொந்த நீர் ஆதாரம் இல்லாததால், கே.சி.வேலி குடிநீர் திட்டத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஏரிகளுக்கு நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோலாரின் முல்பாகல் தாலுகா உருகுண்டே மிட்டூர் கிராமத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆஷா, தண்ணீர் பாதுகாப்பு குறித்து கிராமம், கிராமமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: என் சொந்த ஊர் ஷிவமொக்காவின் தீர்த்தஹள்ளி. மலை பகுதியான அங்கு குடிநீருக்கோ, விவசாயம் செய்யவோ தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. ஆனால் தற்போது நான் வசிக்கும் கோலாரின் முல்பாகலில் கடுமையான குடிநீர் பிரச்னை உள்ளது. ஏரிகளிலும் தண்ணீர் இல்லை. நீர் இல்லாமல் மக்கள் படும் கஷ்டத்தை நீக்க ஆரோஹனா என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை அமைத்தேன். இங்கு உறுப்பினர்களாக உள்ளவர்கள் உதவியுடன் ஏரியில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை அகற்றி, ஏரியை துார்வாரி தண்ணீர் நிரப்பும் பணி செய்கிறேன். வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீரை ஏரிகளுக்கு திருப்பி விடும் பணிகளையும் செய்து வருகிறோம். ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி நிறுவ வேண்டும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அனைவரும் முன்வர வேண்டும் என்றும், நீர் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். வறட்சி பகுதி என்று அழைக்கப்படும் கோலாரை, மலைநாடு பகுதி என்று அனைவரும் அழைக்க வேண்டும். அதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.