- நமது நிருபர் - இன்றைய காலத்தில், இளைஞர்கள் பலர் வேலை கிடைக்காமல் அல்லது வேலை இருந்தாலும், செய்ய விரும்பாமல் சோம்பேறிகளாக, கையைக் கட்டி அமர்ந்திருப்பதை பார்க்கிறோம். ஆனால், பெண் ஒருவர், 60 வயதாகியும் தன் சொந்த உழைப்பால், வளமாக வாழ்கிறார். இவரது வாழ்க்கை அனைத்து பெண்களுக்கும், முன் மாதிரியாக உள்ளது. இது நவீன யுகம். அனைத்துக்கும் இயந்திரங்கள் வந்து விட்டன. மைசூரின் ஜெயலட்சுமி இன்றைக்கும், பழைய சம்பிரதாயத்தை காப்பாற்றி வருகிறார்.. வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறார். மைசூரு மாவட்டம், ஹுன்சூர் தாலுகாவில் வசிப்பவர் ஜெயலட்சுமி, 60. இவர் மூன்று பசுக்கள் வளர்க்கிறார். அது மட்டுமின்றி, பழைய சம்பிரதாய, செக்கு பயன்படுத்தி, சுத்தமான நல்லெண்ணெய், கடலை எண்ணை தயாரிக்கிறார். மார்க்கெட்டில் விற்கப்படும், கலப்பட எண்ணெய்களுக்கு இடையே, ஜெயலட்சுமி தயாரிக்கும் இயற்கையான எண்ணெய்களுக்கு, கிராமப்புறங்களில் நல்ல 'டிமாண்ட்' உள்ளது. எண்ணெய் தயாரிப்பதுடன், அதை விற்க ஜெயலட்சுமி யாருடைய உதவியையும் நாடுவது இல்லை. டி.வி.எஸ்., - 50 வாகனத்தை, தானே ஓட்டி சென்று எண்ணெய்களை கிராமங்களில் வீடு வீடாக விற்பனை செய்கிறார். காலை முதல் இரவு வரை, மாடுகள் பராமரிப்பு, செக்கு பணி, ஊர் ஊராக செல்வது என, ஓய்வின்றி உழைக்கிறார். கடினமாக உழைத்தால், அதற்கு தக்க பிரதி பலன் கிடைக்கும் என்பதற்கு, இவரே சாட்சியாகும். மாதந்தோறும், 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். கலப்படம் இல்லாத எண்ணெய் என்பதால், மக்களிடையே ஜெயலட்சுமிக்கு நல்ல பெயர் உள்ளது. மக்களிடம் சம்பாதித்துள்ள நம்பிக்கையே, ஜெயலட்சுமியின் வெற்றியின் ரகசியம். வயதாகிவிட்டது, கை வலி, கால் வலி என, முணுமுணுத்தபடி ஓரமாக அமர்ந்திருப்பதை விட, தன்னால் முடியும் என்ற மன உறுதியுடன், உழைத்து வாழும் இவர், பெண்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.