உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் /  ரோடு ரோலர் ஓட்டும் சங்கரம்மா

 ரோடு ரோலர் ஓட்டும் சங்கரம்மா

- நமது நிருபர் - கார், பஸ் ஓட்டுவது போன்று ரோடு ரோலர் ஓட்டுவது எளிதான விஷயம் இல்லை. கனமான இயந்திரம் என்பதால் அதை மிகவும் கடினமாக கையாள வேண்டியது அவசியமாக உள்ளது. சிறிய தவறு நடந்தால் கூட பெரிய விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நன்கு பயிற்சி பெற்ற ரோடு ரோலர் டிரைவர்களே, சில சமயங்களில் தடுமாறுவது இயல்பாக நடக்கிறது. ஆனாலும் சவாலான ரோடு ரோலரை ஓட்டி பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார் 45 வயது பெண் சங்கரம்மா. அவர் கூறியதாவது: எனது சொந்த ஊர் ஹாவேரி மாவட்டம், ஹனகல் தாலுகா அக்கிஆலுார். நான்காம் வகுப்பு வரை படித்து உள்ளேன். மேற்கொண்டு படிக்க ஆசை இருந்தது. குடும்ப கஷ்டத்தால் கல்வியை தொடர முடியவில்லை. பெற்றோருக்கு பாரமாக இருக்க கூடாது என்பதால், எனது 20 வயதில், தட்சிண கன்னடாவின் உப்பினங்கடிக்கு கட்டட வேலைக்கு வந்து விட்டேன். முதலில் சித்தாளாக வேலை செய்தேன். பின், படிப்படியாக தொழிலை கற்று கொத்தனாராகி, அதனை தொடர்ந்து மேஸ்திரியும் ஆனேன். தற்போது கான்ட்ராக்டர்கள் எடுக்கும் பணிகளை செய்து கொடுக்கிறேன். சாலையோரம் தடுப்பு சுவர் அமைப்பது; குறுகிய பாலம் கட்டுவது போன்ற பணிகளை ஆள் வைத்து செய்கிறேன். சாலை பணிகள் நடக்கும் போது ரோடு ரோலரை கொண்டு, சாலையை சமப்படுத்துவதை பார்த்த போது, எனக்கும் ரோடு ரோலர் ஓட்ட வேண்டும் என்று ஆசை வந்தது. ரோடு ரோலர் டிரைவரிடம் சென்று கேட்ட போது, எனக்கு பத்து நாட்கள் பயிற்சி அளித்தார். கியர் லீவர், ஸ்டீயரிங்கை கையாள்வது எப்படி என்று நுணுக்கமாக சொல்லி கொடுத்தார். அவரது அறிவுரை மூலம் ரோடு ரோலர் ஓட்ட கற்று கொண்டேன். தற்போது கட்டட வேலை இல்லாத நேரத்தில், ரோடு ரோலர் ஓட்ட சென்று விடுகிறேன். கனமான இயந்திரம் என்பதால் சுற்றியுள்ள நபர்கள், பிற வாகனங்களை பார்த்து கவனமாக ஓட்ட வேண்டும். நான் உட்பட எனது பெற்றோருக்கு ஏழு பெண் பிள்ளைகள். இதில், மூன்று பேர் இறந்து விட்டனர். இன்னும் மூன்று சகோதரிகளும் கூலி வேலை செய்கின்றனர். நான் திருமணம் செய்யவில்லை. எனக்கு கிடைக்கும் பணத்தை, சகோதரிகளின் குழந்தைகளுக்கு கல்விக்கு கொடுக்கிறேன். பெற்றோரையும் கவனித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை