உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் /  மெஹந்தி கோனில் கலைத்திறன் காட்டும் மாணவி

 மெஹந்தி கோனில் கலைத்திறன் காட்டும் மாணவி

- நமது நிருபர் - பெலகாவியின் ராய்பாக் டவுனை சேர்ந்தவர் சுவாதி குராடே, 22. தார்வாட் அரசு ஓவிய கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவர், மெஹந்தி கோனில் சத்ரபதி சிவாஜியின் உருவப்படத்தை வரைந்து அசத்தி உள்ளார். இதற்காக ஆசியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்சில் இவரது பெயர் இடம் பிடித்து உள்ளது. இதுகுறித்து சுவாதி குராடே கூறியதாவது: சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவது எனக்கு பிடிக்கும். பி.யு.சி.,க்கு பின் ஓவிய கல்லுாரியில் தான் சேர வேண்டும் என்று முன்பே முடிவு எடுத்து விட்டேன். ஓவியம் வரைவதில் எனக்கு இருந்த ஆர்வத்தை பார்த்து, பெற்றோரும் நிறைய ஊக்கம் அளித்தனர். நிறைய ஓவிய போட்டிகளில் பரிசு வென்று உள்ளேன். திருமணத்தின் போது மணப்பெண்கள் மெஹந்தி கோன் மூலம், தங்களுக்கு பிடித்த உருவங்கள், ஓவியங்களை கைகளில் வரைகின்றனர். மெஹந்தி கோன் மூலம் சத்ரபதி சிவாஜி உருவப்படத்தை வரைய வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. இதற்காக சில நாட்கள் பயிற்சி எடுத்தேன். தற்போது மெஹந்தி கோனில் சத்ரபதி சிவாஜி உருவப்படத்தை வரைந்து விட்டேன். இதனை வீடியோ எடுத்த நண்பர்கள் சிலர், ஆசியா புக்ஸ் ஆப் ரெக்காட்சுக்கு அனுப்பி வைத்தனர். எனது திறமையை அங்கீகரிக்கும் வகையில், ஆசியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ், எனது பெயரை இடம் பெற செய்து உள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது கலைத்திறனுக்கு கிடைத்த ஊக்கமாக பார்க்கிறேன். பொறுமை, கலை மீது காதல் இருந்தால் மட்டுமே இதுபோன்று வரைய முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி