| ADDED : டிச 01, 2025 06:04 AM
மைசூரு மாவட்டம், குக்கரஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளி ஆங்கில ஆசிரியை வாணி, 45. இந்த பள்ளியில் 15 ஆண்டுகளாக மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். இவர், மாணவர்களி டம் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார். அனைவரிடமும் அன்பாகவே நடந்து கொள்வதை வாடிக்கையாக வைத்து உள்ளார். குறிப்பாக மாணவர்கள் மனம் புரிந்து நடந்து கொள்வதில் கை தேர்ந்தவர். பொதுவாக, பல மாணவர்களுக்கு ஆங்கில ஆசிரியர்களை பிடிக்காது. புரியாத வகையில் ஆங்கில இலக்கணம் நடத்துவது, ஆங்கில வகுப்பில் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வைப்பது போன்றவற்றால் பிடிப்பதில்லை ஆனால், வாணியோ மாணவர்களை அடிக்காமல், அவர்களுக்கு புரியும் வகையில் ஆங்கிலம் கற்பித்து வருகிறார். இவரிடம் ஆங்கிலம் கற்று கொண்ட மாணவர்கள், வீட்டிற்கு சென்று தங்கள் பெற்றோரிடமும் ஆங்கிலம் பேசி அசத்துகின்றனர். இதை பார்த்த பெற்றோர், வாணி டீச்சரை நேரில் பார்த்தும் நன்றி தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்து உள்ளனர். தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க நினைத்தவர்களும் கூட, அரசு பள்ளியில் குழந்தையை சேர்த்து விடுகின்றனர். இவரது பணியை பார்த்து மெய் சிலிர்த்த மாவட்ட கல்வி நிர்வாகம், இவருக்கு மாவட்ட அளவிலான 'சிறந்த ஆசிரியர் விருதை' வழங்கி சில மாதங்களுக்கு முன் கவுரவித்தது. இது குறித்து அவர் கூறியதாவது: மாணவர்கள் படிப்பதில் சிரமம் ஏற்படும் பாடங்களில் ஆங்கிலமும் ஒன்று. அப்படி இருக்கையில், ஆங்கிலத்தை எளிமையான வழியில் கற்று தருகிறேன். அவர்களும் கற்று கொண்டு சிறப்பாக மற்றவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுகின்றனர். படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கூட, அடிப்படை ஆங்கிலம் கற்று கொடுக்கிறேன். இதன் மூலம், 10ம் வகுப்பில் ஆங்கிலம் படிப்பதில் ஏற்படும் சிரமத்தில் இருந்து தப்பிக்க முடியும். மாணவர்கள் என்னிடம் சகஜமாக பழகுவதால், அவர்களின் தனிப்பட்ட பிரச்னைகள் குறித்தும் என்னிடம் பேசுவர். அதற்கு நானும் தீர்வுகள் வழங்கி, அவர்களை உற்சாகப்படுத்துவேன். சோகமாக இருக்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவேன். என்னுடன் அனைத்து மாணவர்களும் அன்பாக பழகுகின்றனர். இதை விட வேறு என்ன வேண்டும் எனக்கு. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -: