தடகள வீரராக ஜொலிக்கும் டிரம்ஸ் வாசிப்பாளர்
- நமது நிருபர் - உடுப்பி டவுன் சாந்தவனகட்டேயை சேர்ந்தவர் அபின் தேவடிகா, 24. இவர், 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளில் சிறந்த வீரராக உருவெடுத்து உள்ளார். ஓட்டப்பந்தயம் மட்டுமின்றி டிரம்ஸ் வாசிப்பாளராகவும் உள்ளார். டிரம்ஸ் வாசிப்பு, ஓட்டப்பந்தயம் குறித்து அபின் தேவடிகா கூறியதாவது: நான் 5 வயது சிறுவனாக இருந்த போது, எனது வீட்டின் அருகே நடந்த இசை நிகழ்ச்சியில், கலைஞர் ஒருவர் டிரம்ஸ் சூப்பராக வாசித்தார். இதனால் எனக்கும் டிரம்ஸ் வாசிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஐந்தாம் வகுப்பு படித்த போது, பள்ளியில் நடந்த ஓட்டப்பந்தய போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றேன். எனது திறமையை கண்காணித்த உடற்கல்வி ஆசிரியர் வின்சென்ட், தினமும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள கூறினார். அதே நேரம் டிரம்ஸ் வாசிக்க இசை வகுப்புக்கும் சென்று கொண்டு இருந்தேன். ஓட்டப்பந்தயம் மூலம், டிரம்ஸ் வாசிப்பு பயிற்சி பாதிக்கப்படும் என்று பெற்றோர் நினைத்தனர். ஆனால் எந்த இடைஞ்சலும் இல்லை என்று உடற்கல்வி ஆசிரியர் விளக்கிய பின், பெற்றோர் ஒப்பு கொண்டனர். எனது தந்தை பாஸ்கர் ஆட்டோ மொபைல் கடையில் வேலை செய்தார். ஆனாலும் எனது ஆசையை நிறைவேற்ற அனைத்து வகையிலும் உதவினார். கல்லுாரியில் படிக்கும் போது கல்லுாரிகளுக்கு இடையில் நடந்த 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளில் பல பதக்கங்கள் வென்று உள்ளேன். இதுவரை 1,000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் டிரம்ஸ் வாசித்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.