மைசூரு மாணவியரின் கிரிக்கெட் ஆர்வம்
- நமது நிருபர் -: கிரிக்கெட் மீதான ஆர்வம் மைசூரு மாணவர்களுக்கு மட்டுமின்றி, மாணவியருக்கும் அதிகரித்து வருகிறது. கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்கும் மாணவியரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கிரிக்கெட் என்பது, மற்றொரு மதமாக பார்க்கப்படுகிறது. இதில், அனைவரும் ஒன்றாக கண்டு ரசிக்கின்றனர். இந்திய கிரி க்கெட்டில் ஆண்கள் ஜொலித்து கொண்டிருக்கும் போது, பெண்கள் அணியினர் கண்டு கொள்ளப்படவில்லை. ஆனால், 2005ல் மிதாலிராஜ் தலைமையிலான பெண்கள் அணி, பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பையில் இரண்டாவது இடத்தை பிடித்தது, நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. இதையடுத்து, பி.சி.சி.ஐ., எனும் இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு ஆணையம், இந்திய பெண்கள் கிரிக்கெட் சங்கத்தை, ஆணையத்துடன் இணைத்து கொண்டது. அதன் பின், பெண்கள் அணிக்கு நிதியும், அடிப்படை வசதிகள், ஸ்பான்சர்ஷிப், உள்ளூர் போட்டிகள் நடத்த துவங்கின. ஆண்கள் அணியை போன்றே, பெண்கள் அணி வீரர்களுக்கும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த, 2017 பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பையிலும், இறுதி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தது. கடந்தாண்டு நடந்த உலக கோப்பை போட்டியில், தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து முதன் முறையாக உலக கோப்பையை இந்திய பெண்கள் அணி கைப்பற்றியது. பி.சி.சி.ஐ.,யும் பெண்கள் பிரீமியர் லீக்கை அமல்படுத்தியது, நாட்டில் பெண்கள் இடையே கிரிக்கெட்டை ஊக்குவித்தது. இதன் பலனாக, பலர் இந்திய டெஸ்ட் அணி, ஒரு நாள் அணி, 'டி20' அணிகளில் இடம் பெற்றனர். இதுபோன்று கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்தவர் சாந்தா ரங்கசாமி. 1976ல் இந்திய பெண்கள் அணியை வழிநடத்தியவர். இவரின் சேவையை பாராட்டி, இந்திய அரசு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. அதுபோன்று பி.சி.சி.ஐ.,யும் முதன் முறையாக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது. அதன்பின் கருணா ஜெயின், மமதா மபின், வேதா கிருஷ்ணமூர்த்தி, வனிதா, ஷ்ரேயங்கா பாட்டீல் என பலர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர். மைசூரிலும் மாணவியர் இடையே கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் ஆண்கள் கிரிக்கெட்டுக்கான 'ஹப்'பாக இருந்த பெங்களூரு, இப்போது பெண்களையும் சேர்த்து கொண்டுள்ளது. தற்போது நிலைமை மாறி உள்ளது. மாநிலம், தேசிய அளவில் வீராங்கனைகளை அறிமுகப்படுத்தும் மையமாக மைசூரு மாறி வருகிறது. இந்திய பெண்கள் டெஸ்ட் போட்டியில், மைசூரின் சுபா சதீஷ் விளையாடினார். கடந்த, 2019 - 20 காலகட்டத்தில், 'பவுல் அவுட் கிரிக்கெட் அகாடமி' பெண்களுக்காக பயிற்சியை துவக்கியது. அகாடமி தலைமை பயிற்சியாளர் ரஜத் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில், மாநிலம், தேசிய அளவில் பல வீராங்கனையர் இங்கிருந்து தேர்வாகி உள்ளனர். 2019 - 20ல் மஹாராஜா கல்லுாரி மைதானத்தில் இரு மாணவியருடன் இந்த அகாடமி துவக்கப்பட்டது. அதை தொடர்ந்து கொரோனாவால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவில்லை. அதன்பின், இந்த அகாடமியில் பயிற்சி பெறும் மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர் உலக கோப்பையை வென்றது, மாணவியரின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் பயிற்சிக்கு அனுப்புகின்றனர். இந்தாண்டு 55 மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்தாண்டு பல்வேறு வயதுகளை மாணவியர், பெண்கள், கர்நாடக மாநில அணியில் இடம் பெற்றனர். இங்கு பயிற்சி பெற்ற சுபா சதீஷ் இந்திய பெண்கள் டெஸ்ட் அணியிலும்; கர்நாடகா பெண்கள் அணியில் பல்வேறு வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் எங்கள் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்தாண்டு கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் மானசகங்கோத்ரியில் என்.டி.என்.ஆர்., உடையார் மைதானத்தில் செயற்கை புல்தரை அமைத்துள்ளனர். வார இறுதியில் மூத்த பெண்கள், ஆண்கள் அணியினர், இவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இவ்வாறு கூறினார். கே.எஸ்.சி.ஏ., மைசூரு மண்டல கன்வீனர் சீனிவாஸ் பிரசாத் கூறியதாவது: கே.எஸ்.சி.ஏ., புதிய கமிட்டி, பெண்கள் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க, அவர்களின் திறமையை வளர்க்க, உள்கட்டமைப்பு, திறமையான பயிற்சி கொடுக்க முன்வந்து உள்ளது.கே.எஸ்.சி.ஏ., அகாடமி தேர்வுக்கு, தற்போது மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில், 30 முதல் 35 திறமையான மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டு மைசூரு ம ண்டலத்தில் பெண்கள் தேர்வு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் திறமையானவர்களை தேர்வு மற்றும் பயிற்சியும் அளிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.