உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  முத்ரா திட்டத்தால் தொழிலதிபரான மைசூரு பெண்

 முத்ரா திட்டத்தால் தொழிலதிபரான மைசூரு பெண்

அரசின் முத்ரா திட்டத்தின் மூலம் தையல் தொழில் துவங்கி, இன்று பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கி சாதித்ததுடன், பல பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்து வருகிறார். மைசூரு நகரை சேர்ந்தவர் சரஸ்வதி. மத்திய அரசின், 'முத்ரா' திட்டத்தின் கீழ் கடன் வாங்கி, அதன் மூலம் ஆடைகள் வடிவமைக்கும் தையல் தொழில் செய்து வருகிறார். குடியரசு தின விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பிதழ் வரும் அளவிற்கு முன்னேறி உள்ளார். தனது வெற்றி குறித்து சரஸ்வதி கூறியதாவது: ஆரம்பத்தில் நான் வெளியே வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். வாழ்நாள் முழுதும் இவ்வாறு வெளியே சென்று வேலைக்கு சேர வேண்டுமா என்று யோசித்து கொண்டிருந்தேன். அப்போது தான் மத்திய அரசின், 'முத்ரா' திட்டம் பற்றி அறிந்தேன். அதற்கான ஆவணங்களை சேகரித்து விண்ணப்பித்தேன். முதல் முறையாக 2018ல் 2.5 லட்சம் ரூபாய் கடன் கிடைத்தது. இதை வைத்து தையல் இயந்திரம் வாங்கி, வீட்டிலேயே இரவு பகலாக உழைத்தேன். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. பல ஆர்டர்கள் வீடு தேடி வர ஆரம்பித்தது. இந்த கடனை அடைத்த பின், மீண்டும் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அதிலும் என் தொழிலை விரிவுபடுத்தினேன். இப்போது 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளேன். இந்த கடன் மூலம், மற்ற பெண்களும் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று விரும்பினேன். நான்கு பேருக்கு வேலை கொடுத்து, அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறேன். தற்போது வீட்டின் மாடியில் சிறிதாக ஷெட் அமைத்து, ஆன்லைனில் தையல் பயிற்சி, எடுக்க துவங்கி உள்ளேன். அத்துடன் 'பொட்டீக்' எனும் சிறப்பு வாய்ந்த நாகரீக ஆடைகள், அணிகலன்கள் விற்கும் கடையை திறந்து உள்ளேன். சிறு தொழில் துவங்குவோருக்கு, முத்ரா திட்டம் உதவியாக இருக்கும். இதில் பல பெண்கள் கடன் வாங்கி, முன்னேறி உள்ளனர். எனது தோழி கூட, என் அறிவுரையை கேட்டு, முத்ராவில் கடன் வாங்கினார். இப்போது புறநகரில் ஆடைகள் தொழிற்சாலை துவங்கி உள்ளார். அதுபோன்று, முத்ரா திட்டத்தின் கீழ் கடன் கிடைப்பதில்லை என்று சிலர் கூறுகின்றனர். இதில் விண்ணப்பிப்பவர்கள், தங்களின் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பித்தால் போதும், கடன் கிடைப்பது உறுதி. நானும் சரி, என் தோழியும் சரி, இதற்காக முதல் முறையாக விண்ணப்பித்தோம். அப்போதே எங்களுக்கு கடன் கிடைத்துவிட்டது. கடன் வாங்குவது முக்கியமல்ல. அதனை திருப்பி செலுத்துவதும் முக்கியம். இந்தாண்டு குடியரசு தின விழாவில், எனக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பிதழ் வந்தது. டில்லியில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை