உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  விளையாட்டு விடுதியை மாற்றுவதால் வீரர்கள் அதிருப்தி

 விளையாட்டு விடுதியை மாற்றுவதால் வீரர்கள் அதிருப்தி

- நமது நிருபர் - மாநில மற்றும் தேசிய அளவில், சாதனை செய்யும் விளையாட்டு வீரர்களுக்காக, பல்லாரியில் திறக்கப்பட்ட விடுதியை, பெங்களூருக்கு மாற்றுவதால், விளையாட்டு வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கர்நாடகாவின் வட மாவட்டங்களில், விளையாட்டு வீரர்கள் அதிகம் உள்ளனர். இவர்களின் வசதிக்காக, பல்லாரியில் கால்பந்து விளையாட்டு வீரர்கள் தங்கி, பயிற்சி பெற வசதியாக விடுதி கட்டப்பட்டிருந்தது. இது, கிராமங்களில் வசிக்கும் விளையாட்டு வீரர்கள், ஏழை குடும்பத்தை சேர்ந்த வீரர்களுக்கு, மிகவும் உதவியாக இருந்தது. விடுதியில் தங்கி பயிற்சி பெற்றனர். இவர்களில் பலர் மாநில, தேசிய கால்பந்து போட்டிகளில் பங்கேற்று சாதனை செய்துள்ளனர். இப்போதும், பல்லாரி உட்பட, சுற்றுப்பகுதி மாவட்டங்களின் விளையாட்டு வீரர்களும், இங்கு தங்கியுள்ளனர். இந்நிலையில், பல்லாரியில் உள்ள விடுதி, திடீரென பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது. பல்லாரியின் கால்பந்து விளையாட்டு விடுதியில் தங்கியிருந்த வீரர்களை, பெங்களூரின், வித்யா நகரில் உள்ள விடுதியில், அட்மிஷன் பெறும்படி விளையாட்டு துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், விளையாட்டு வீரர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். விடுதியை மாற்றும் முடிவை கை விடும்படிவலியுறுத்துகின்றனர். இது குறித்து, விளையாட்டு வீரர்கள் சூரஜ்குமார், ராஜேஷ் கூறியதாவது: கிராமப்பகுதிகள், பின் தங்கிய பகுதிகளில் கால்பந்து விளையாட்டில் திறமை உள்ளவர்களை, அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான பயிற்சியளித்து, போட்டிகளில் பங்கேற்க தயாராக்கும் நோக்கில், 2018ல் பல்லாரியின், ரேடியோ பார்க் பகுதியில் விளையாட்டு விடுதி கட்டப்பட்டது. விளையாட்டு பயிற்சி பெறும், பி.யு.சி., மாணவர்களுக்கு இங்கு அட்மிஷன் அளிக்கப்பட்டது. கடந்த எட்டு ஆண்டுகளில், இந்த விடுதி திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கியது. இவர்கள் மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று சாதனையும் செய்துள்ளனர். கர்நாடக மாநில கால்பந்து அசோசியேஷன் சார்பில் நடந்த, பல்வேறு மாநில அளவிலான போட்டிகளில், ஆறு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்கள் பெற்றனர். இங்கு பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள், கேலோ இந்தியா, சுவாமி விவேகானந்தா தேசிய புட்பால் சாம்பியன்ஷிப், ஆல் இந்தியா யூனிவர்சிட்டி கேம்ஸ் உட்பட, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி, சாதனை செய்துள்ளனர். இத்தகைய வீரர்களை உருவாக்கிய விடுதியை, பெங்களூருக்கு மாற்றுவது சரியல்ல. இது குறித்து, மக்கள் பிரதிநிதிகளும் வாய் திறக்கவிலை. பல்லாரி, விஜயநகரா, கொப்பால், ராய்ச்சூர், யாத்கிர், கலபுரகி, பீதர் உட்பட, பின் தங்கிய மாவட்டங்களின் சிறார்கள், குறைந்த கட்டணத்தில் விளையாட்டு பயிற்சி பெற்று, தங்களின் திறமையை வளர்த்துக்கொள்ள உதவியாக இருந்தது. இவர்களால் பெங்களூரு போன்ற, மாநகரங்களில் வசிப்பது, பயண செலவுகள் செய்வது கஷ்டமாகும். எங்களை போன்ற ஏழை குடும்பத்தினருக்கு, அநியாயம் நடப்பது தெரிந்தும், மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்கின்றனர். விளையாட்டு வீரர்கள் மீது, அக்கறை கொண்டு, விளையாட்டு விடுதியை பல்லாரியிலேயே நீட்டிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை