நொறுக்குகள்
- நமது நிருபர் -: l எண்ணெயில் நான்கு குச்சிகளை போட்டு பூரி பொரித்தால், பூரி எண்ணெய் அதிகம் குடிக்காது. l சப்பாத்தி மாவில் கொஞ்சம் கோதுமை மாவு, தயிர், சுடு தண்ணீர் சேர்த்து மாவு பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும். l பசியின்மைக்கு அகத்தி கீரை, மலச்சிக்கலுக்கு முளைக்கீரை, சரும நோய்களுக்கு அரைக்கீரை, ரத்த அழுத்தம் குறைய பருப்பு கீரை, சிறுநீரக பிரச்னைக்கு சிறுகீரை சாப்பிடலாம். l எலுமிச்சை சாதம் செய்யும் போது, இறுதியாக எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அப்போது தான், சாதத்தின் சுவை அதிகமாக இருக்கும். l சாப்பாடு பார்சலில் கலர், கலரான காய்கறிகளை வைத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். l முட்டை குழம்பு செய்யும்போது, மிளகு, இஞ்சி சேர்த்தால் முட்டை வாடை அதிகம் வராது. l இட்லி மீது லேசாக எண்ணெய் தடவினால், இட்லி காய்ந்து போகாமல் இருக்கும். l தோசையை பட்டர் பேப்பரில் சுற்றி சாப்பாடு பார்சலில் வைத்தால், தோசை காய்ந்து போகாமல் இருக்கும். l உடல் சூட்டை குறைக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம். l பழைய சாதத்தை நன்கு பிசைந்து, அதனுடன் கடலை மாவு, சோள மாவு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய் துாள் சேர்த்து பிசையவும். இதை எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் பக்கோடா தயார். l குழந்தை பெற்ற பெண்கள், வாரம் ஒரு முறை பூங்கார் அரிசியை சமைத்து சாப்பிட்டால், தாய்ப்பால் அதிகம் சுரக்கும். l எலுமிச்சை பழத்தின் மீது எண்ணெய் தடவி, அவற்றை குளிர்சாதன பெட்டிக்குள் வைத்தால், ஒரு மாதம் ஆனாலும் கெடாமல் இருக்கும். l தக்காளியிலிருந்து சாறு வெளியே வரும் வரை வதக்கினால், தக்காளி சாதம் சுவையாக இருக்கும். l வெரைட்டி ரைஸ் செய்யும் போது, சாதம் சூடு ஆறிய பிறகே கலவையை கொட்டி கிளற வேண்டும். l முழு தேங்காயை குளிர்சாதன பெட்டியில் வைத்தால், ஒரு மாதம் ஆனாலும் கெடாமல் இருக்கும். l எலுமிச்சை சாற்றில் கருப்பட்டி கலந்து குடித்தால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும். l உளுந்தவடை மாவில் கீரை சேர்த்து, பிசைந்து வடை சுட்டால், வடையின் சுவை அதிகமாகும். l கொத்தமல்லி, கறிவேப்பிலையை வதக்காமல் நேரடியாக உணவில் சேர்க்க வேண்டும். அப்போது தான், அவற்றின் சத்து நேரடியாக உடலில் சேரும். l வறுத்த பாசி பருப்பை அரிசியுடன் சேர்த்து வேக வைத்தால், வெண் பொங்கல் சுவையாக இருக்கும்.