உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் /  மழை நீரை சேகரிக்கும் ஹரிஷ்

 மழை நீரை சேகரிக்கும் ஹரிஷ்

- நமது நிருபர் - மாநகரங்களில் தொடர்ந்து ஒரு மணி நேரம், மழை பெய்தால் போதும். வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. நாள் முழுதும் மழை பெய்தால், ஊரே மூழ்கி விடும். இதற்கு நகரங்கள் கான்கிரீட் காடானதும், தண்ணீர் பூமிக்குள் இறங்க வழியில்லாததும் முக்கிய காரணம். இந்த பிரச்னைக்கு தீர்வு காண ஹரிஷ், மழை நீர் சேகரிப்பு வசதி செய்து, பாராட்டு பெற்றுள்ளார். பெலகாவி நகரின், டிலகவாடி கிராமத்தில் வசிப்பவர் ரஹரிஷ் சதானந்த தேரகாவ்கர். இவர், மழை நீரை சேகரிப்பதில், பெரும் புரட்சி செய்துள்ளார். இவர் கடந்த, 21 ஆண்டுகள், துபாயின் வங்கி ஒன்றில் பணியாற்றினார். 2024ல் தாய்நாட்டுக்கு திரும்பினார். தன் கிராமத்தில், புதிய பிளாட் வாங்கினார். அதே ஆண்டின் பிப்ரவரியில், அந்த அபார்ட்மென்டின் கீழே உள்ள கிணறும், போர்வெல்லும் வற்றின. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. டேங்கர் நீரை வாங்கினர். பிப்ரவரி முதல், மே மாதம் வரை, அபார்ட்மென்டின் 22 வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்ய, 50,000 ரூபாய் செலவானது. தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, ஹரிஷ் திட்டமிட்டார். அவரது பழைய வீட்டில், 2014ல் மழை நீர் சேகரிப்பு வசதி செய்திருந்தார். அங்கு தண்ணீர் பிரச்னை இருக்கவில்லை. அதே போல, இந்த அபார்ட்மென்டிலும் செய்யலாம் என, முடிவு செய்து, அனைத்து வீட்டினருடன் ஆலோசித்தார். அவர்களும் கை கோர்த்ததால், அங்கு மழை நீர் சேகரிப்பு வசதி செய்தார். இதன் பயனாக, 2025 மற்றும் 2026ல் டேங்கர் நீரையும் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இவர்களுக்கு தேவையான தண்ணீர், அபார்ட்மென்டின் கிணறு மற்றும் போர்வெல்லில் இருந்து கிடைக்கிறது. தன் அபார்ட்மென்ட் மட்டுமின்றி, அக்கம், பக்கத்தில உள்ள அபார்ட்மென்ட்களிலும், மழை நீர் சேகரிப்பு வசதி செய்யும்படி ஊக்குவித்தார். இவரது முயற்சியால் கடந்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு நிறுவனங்கள், 20க்கும் மேற்பட்ட அபார்ட்மென்ட்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில், தானே முன் நின்று மழை நீர் சேகரிப்பு வசதி செய்தார். ஹரிஷ் வசிக்கும் அபார்ட்மென்ட் கூரை, 7,000 சதுர அடி கொண்டதாகும். கூரையில் விழும் மழை நீர், வீணாக சாக்கடையில் விழுவதை தடுத்து, அந்த நீரை பைப் மூலமாக, அந்தந்த வீட்டு வளாகத்தில் உள்ள கிணறு, போர்வெல்லுக்கு அனுப்பப்படுகிறது. அதற்கு முன், சுத்திகரித்து அனுப்பப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கிறது. ஆண்டு முழுதும் தண்ணீர் கிடைக்கிறது. குடிக்கவும், மற்ற தேவைகளுக்கும் இதே நீரை, அபார்ட்மென்ட் மக்கள் பயன்படுத்துகின்றனர். தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கண்ட ஹரிஷுக்கு, நன்றி கூறுகின்றனர். இது குறித்து, அவர் கூறியதாவது: நகரங்கள் வளர்ச்சி அடைவதால், கான்கிரீட் சாலைகள், வானுயர்ந்த கட்டடங்கள் முளைத்ததால், தண்ணீர் இறங்கவே இடம் இல்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இதற்கு முன், பெலகாவி நகரில் 20 முதல், 25 அடி தோண்டினால் போதும், தண்ணீர் கிடைத்தது. ஆனால், இப்போது 50 அடி, 100 அடி தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இத்தகைய நேரத்தில் மழை நீரை சேகரிக்க, எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதுவரை, 50 இடங்களில், மழை நீர் சேகரிக்கும் வசதியை செய்துள்ளேன். மழை சேகரிப்பு வசதியை செய்து கொடுக்க, நான் கட்டணம் ஏதும் பெறுவதில்லை. தேவையான உபகரணங்களை வாங்கினால் போதும். இலவசமாக செய்து தருகிறேன். தண்ணீர் இல்லையென்றால், வாழ முடியாது. வரும் சந்ததியினருக்கு சுத்தமான குடிநீர், காற்றை விட்டு செல்வது நம் கடமை. மழை நீரை அனைவரும் வீணாக்காமல், சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Murugan K
ஆக 11, 2026 10:24

When you are writing an article like this, it will be very helpful, if you would have given the contact number of the person. Many of the readers might get the technical information from him and benefited. As a prominent journal you have responsibility to bring about the change in the society, just blowing your trumpet without a purpose is utter waste.