கணித அச்சத்தை போக்கும் ராமானுஜர் கணித பூங்கா
- நமது நிருபர் -: தார்வாட் மாவட்டம், கர்நாடக பல்கலைக்கழகம் வளாகத்தில் உள்ள மண்டல அறிவியல் மையம், நாடு முழுதும் அறியப்படும் மையங்களில் ஒன்றாகும். இந்த மையத்தில், 1 ஏக்கரில், சீனிவாச ராமானுஜர் கணித பூங்கா அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு கணித கருத்துகளை அறிமுகப்படுத்தி, கணிதம் குறித்த அவர்களின் அச்சத்தை போக்குவதே, இந்த கணித பூங்காவின் முக்கிய நோக்கமாகும். தார்வாடில் உள்ள இந்த அறிவியல் மையம், புத்தகங்கள் மட்டுமின்றி, பல்வேறு சோதனைகள், கற்பனைத்திறன் மூலம் மாணவர்களின் அறிவையும், கணிதத்தையும் புரிந்து கொள்ள உதவுகிறது. கணிதவியலாளர் சீனிவாச ராமானுஜரின் பெயரிலான இந்த கணித பூங்காவில் பரிமாண அமைப்பு, பிதாகரஸ் தேற்றம், கணிதம் மற்றும் அதன் அடிப்படை கிளைகளான இயற்கணிதம், எண் கணிதம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இங்கு 5 முதல், 10ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்துக்கு ஏற்ற வகையில், 29 மாதிரிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த பூங்காவில் உற்று நோக்கல், செய்முறை மூலம் கணிதத்தை மாணவர்கள் புரிந்து கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதிரியிலும், சிக்கலான கணிதத்திற்கு எளிய முறையில் தீர்வுகள் வழங்கும் குறிப்புகள் உள்ளன. இவை மாணவர்களுக்கு அனுபவப்பூர்வமாக கற்க வசதியாக இருக்கின்றன. பாரம்பரிய வகுப்பறைக்கு பதிலாக, செய்முறை விளக்கங்கள் மூலம் கணிதம் அல்லது அறிவியலை கற்க ஒரு வாய்ப்பை, இந்த பூங்கா வழங்குகிறது. தினமும் ஏராளமான குழந்தைகளும், ஆசிரியர்களும் இந்த பூங்காவை பார்வையிட வருகின்றனர். இந்த மையம், குழந்தைகள் இடையே ஆர்வம், படைப்பாற்றல், அறிவியல் சிந்தனையை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கர்நாடக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இந்த மண்டல அறிவியல் மையத்தில், 1.80 கோடி ரூபாய் செலவில், ஒரு புத்தாக்க மையமும் அமைக்கப்பட்டுள்ளது.