பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் முக்கியமான ஒன்றாகும். வாழ்வாதாரத்துக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் அடங்கியுள்ளன. குறைந்தப்பட்சமாக ஆறு மாதங்களுக்காவது கட்டாயமாக குழந்தைக்கு தாய்பால் கொடுக்க வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும். குழந்தை பிறந்தவுடனேயே தாய்ப்பால் சுரப்பதற்காகவும், ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் இளம் தாய்கள் சத்தான உணவை சாப்பிட வேண்டியுள்ளது. அதேவேளையில், அதீத ஆர்வம், விருப்பம் காரணமாக ஒரு சில கண்ட உணவுகளையும் சாப்பிடுவர். ஆனால், அப்படி சாப்பிடக்கூடிய உணவுகள் தாய்ப்பாலின் வழியாக குழந்தையையும் சென்றடைகிறது. எனவே, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, சாப்பிடும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது எனப் பார்க்கலாம்...
காபி பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும், அதிலுள்ள கஃபைன் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதிகளவில் காபி குடிக்கும் போது, அதிலுள்ள கஃபைன் தாய்ப்பால் சுரப்பில் பாதிப்பை உண்டாக்கும். கஃபைன் தாய்ப்பாலில் கலக்கும் போது குழந்தையின் உடலில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்துகிறது; தூக்கத்துக்கும் பாதிப்பு உண்டாகக்கூடும். எனவே, ஒரு கப்புக்கு மேல் குடிப்பதை தவிர்க்க வேண்டும். டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் மாத்திரைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒரு சில நேரங்களில் குழந்தையின் பற்களில் கருப்பு நிற கறை தெரியக்கூடும்; அதற்கு மாத்திரைகளும் காரணமாகின்றன. குறிப்பிட்ட அளவுக்கு மேல் மாத்திரைகளை எடுக்கும் போது, குழந்தைக்கும் பக்க விளைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
தாய்ப்பால் கொடுக்கும் போது முடிந்தளவுக்கு மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும். ஆல்கஹால் தாய்ப்பால் வெளியேற்ற ரிஃப்ளெக்ஸை தடுப்பதுடன், குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பதை கடினமாக்குகிறது. குழந்தையில் பால் உட்கொள்ளும் திறன் கணிசமாக குறைவதுடன், தூக்கத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது.மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் (Highly
processed foods) ஆரோக்கியமற்ற கொழுப்புகள், அதிக சர்க்கரை இருக்கக்கூடும்.
அதேவேளையில், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள்
குறைவாகவே இருக்கக்கூடும். தாய்ப்பால் ஊட்டும்போது தாயின் உணவுமுறை,
பிற்கால வாழ்க்கையில் அவரது குழந்தையின் உணவு விருப்பங்களை பாதிக்கலாம் என
ஆய்வுகள் கூறுகின்றன.
காரமான உணவுகளை சாப்பிடும் போது, அது தாய்ப்பால் மூலமாக குழந்தையின்
உடலுக்கு சென்று செரிமான மண்டலத்தை பாதிக்கிறது. இதனால், வயிற்று எரிச்சல்,
உப்புசம் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது. ஒரு சில நேரங்களில்
வாந்தியை கூட ஏற்படுத்தக்கூடும். எனவே, தாய்ப்பால் கொடுக்கும்
காலக்கட்டத்தில் மிகவும் காரமான உணவுகளை தவிர்க்கலாம். பீன்ஸ், பராக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற வாய்வு தொல்லைக்கு வழிவகுக்கும்
உணவுகளை தவிர்க்கலாம். சீஸ், தயிர் மற்றும் பிற பால் பொருட்களை உட்கொள்ளும்
போது, குழந்தைகளுக்கு வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை மற்றும்
அடிவயிற்று வலி ஆகியவை ஏற்படக்கூடும்.