ஆயிரம் மலர்களே... மலருங்கள்... சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கும் காபி எஸ்டேட்கள்
நம்மை நாமே மறக்க செய்யும் சக்தி இருப்பது, அழகும், நறுமணமும் நிறைந்த பூக்களுக்கு மட்டுமே. எதற்கு மயங்காதவர்களும், பூக்களின் அழகிலும், வாசத்திலும் மயங்காமல் இருக்க மாட்டார்கள். தற்போது மலை மாவட்டமான சிக்கமகளூரில் பல்வேறு பூக்கள் மலர்ந்து, சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது. சுற்றுலா பயணியருக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் சிக்கமகளூரும் ஒன்றாகும். இது மிக அதிகமான வனப்பகுதி மற்றும் மலைப்பகுதி அடங்கிய மாவட்டமாகும். மஞ்சள், ஊதா சிக்கமகளூரு மாவட்டத்தின் கொப்பா, பாளேஹொன்னுார், ஜெயபுரா, என்.ஆர்.புரா தாலுகாக்களின் மலைப் பகுதிகளில் அழகழகான பூக்கள் வளர்ந்து, கண்களை, மனதை கொள்ளை கொள்கின்றன. இங்குள்ள காபி எஸ்டேட்களில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இப்பூக்களை அதிகமாக காணலாம். இவை, மஞ்சள், ஊதா நிறங்களில் மலர்ந்துள்ளன. எஸ்டேட்களில் மலர்ந்துள்ள, 'போகன்வில்லா' ரக பூக்கள், காண்போரை மயக்குகின்றன. இதை காண்பதற்காகவே, சுற்றுலா பயணியர் குவிகின்றனர். பூக்களின் நடுவில் நின்று, போட்டோ, செல்பி, வீடியோக்கள் எடுக்கின்றனர். இனிமை பொழுது கொப்பா தாலுகாவின் எஸ்டேட்களுக்கு சுற்றுப்பகுதியினர் நடை பயிற்சிக்கு வருகின்றனர். மாலை நேரத்தில் நண்பர்கள், குடும்பத்துடன் வந்து, பூக்களின் அழகை ரசித்தபடி இனிமையாக பொழுது போக்குகின்றனர். இங்கு அழகான சூழ்நிலை இருப்பதால், ப்ரீவெட்டிங் போட்டோ ஷூட், படப்பிடிப்பு, சின்னத்திரை படப்பிடிப்புகளும் நடக்கின்றன. சிக்கமகளூருக்கு வரும் சுற்றுலா பயணியர், கொப்பாவின் காபி எஸ்டேட்டுகளில் மலர்ந்துள்ள பூக்களின் அழகை ரசிக்க மறக் காதீர்கள். எப்படி செல்வது? சிக்கமகளூரின் மற்ற தாலுகாக்களில் காபி எஸ்டேட்டுகள் உள்ளன என்றாலும், கொப்பாவில் மலர்களால் சூழப்பட்ட எஸ்டேட்டுகளின் எண்ணிக்கை அதிகம். பெங்களூரில் இருந்து 321 கி.மீ., மைசூரில் இருந்து 251 கி.மீ., மங்களூரில் இருந்து 143 கி.மீ., சிக்கமகளூரில் இருந்து 87 கி.மீ., தொலைவில் கொப்பா உள்ளது. முக்கிய நகரங்களில் இருந்தும் கொப்பாவுக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. விமானத்தில் வந்தால், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கொப்பாவுக்கு வரலாம். காபி எஸ்டேட்களை பார்க்க நேரம் கட்டுப்பாடு ஏதும் இல்லை. ஆனால் காட்டு யானைகள் பீதி இருப்பதால், பகலில் சென்று இருள் சூழ்வதற்குள் திரும்புவது நல்லது. - நமது நிருபர் -