ஏஐ ரோபோக்களுடன் குடும்பம் நடத்துவதை சட்டமும் சமூகமும் அங்கீகரிக்குமா?
இன்றைய காலகட்டத்தில் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது. காதல் மற்றும் உறவுக்கு ரோபோக்களைப் பயன்படுத்த முடியுமா என்கிற ஆராய்ச்சி பல காலமாக நடைபெற்று வருகிறது. மனிதர்களின் பணியாளராக விளங்கும் ஹியூமனாய்டு ரோபோக்கள் ஆராய்ச்சி ஒருபக்கம் முழுவீச்சில் நடைபெறும்போதும் செக்ஸ் ரோபோக்கள் ஆராய்ச்சியும் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளால் மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போதுள்ள செக்ஸ் டால்கள் காலம் போய் எதிர்காலத்தில் மனிதர்கள் சிலிக்கானால் உருவாக்கப்பட்ட செக்ஸ் ரோபோக்களைத் திருமணம் செய்துகொள்வர் என பல விஞ்ஞானிகள் கணித்து வருகின்றனர். ஆண்/ பெண் செக்ஸ் ரோபோக்களில் உள்ள முக்கியப் பிரச்னை, ரோபோக்களுக்கு உரித்தான ஒரே மாதிரியான குரல், புரோக்ராம் செய்யப்பட்ட கை, கால் அசைவுகள்தான். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை செக்ஸ் ரோபோக்களிடம் புகுத்தினால் இவை மனிதர்கள் போலவே நடந்துகொள்ளும். இதுகுறித்து கூகுள் முன்னாள் நிர்வாகி முகமது மோ கேவாட் பேட்டியளித்துள்ளார். எதிர்காலத்தில் செக்ஸ் ரோபோக்கள் ஏஐ தொழில்நுட்பம் வாயிலாக மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ளும். மேலும் இவற்றின் குரல் மாறுதல், வார்த்தை உச்சரிப்பு, புன்னகை உள்ளிட்ட முக பாவனைகள் மனிதர்களைப் போலவே இருக்க பலகட்ட ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன.