இயற்கையின் அதிசயம்... ஏரியில் மிதக்கும் கிராமம்!
இமயமலையின் அடிவாரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகள், ஆறுகள், ஏரிகள் என அழகிய நிலப்பரப்பை கொண்டுள்ள மாநிலம் மணிப்பூர். இங்குள்ள ஏரிகளில் மிகவும் புகழ் பெற்றது லோக்டக் ஏரி. அப்படி இந்த ஏரியின் சிறப்பம்சம் என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க...நீர் நிலைகளுக்கு மத்தியில் புல்வெளிகள் சூழ்ந்த நிலப்பரப்பை கொண்டிருப்பது தான் இதன் சிறப்பம்சம். அந்த சிறு நிலப்பரப்புக்குள் சின்னஞ்சிறு வீடுகள் அமைத்து மக்கள் வசிப்பது மற்றொரு ஆச்சரியம். திரும்பிய திசையெல்லாம் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் படகின் துணையோடுதான் பயணிக்க முடியும். அருகிலுள்ள வீட்டுக்கு செல்லவேண்டும் என்றால் கூட, படகுகளில் தான் செல்ல முடியும்.
ஆங்காங்கே வீடுகளுடன் காட்சியளிக்கும் இந்த சின்ன தீவு கிராமத்துக்கு பெயர் சம்பு காங்க்போக். இங்கு சுமார் 130 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் 400 பேர் வசிக்கிறார்கள். இதுதான் இந்தியாவில் இருக்கும் ஒரே இயற்கையான மிதக்கும் கிராமம் என்று கூறப்படுகிறது.