திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாணம் விமரிசை!
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கடந்த 2ம் தேதி கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7ம் தேதி கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து சூரனை வதம் செய்தார் முருகப்பெருமான். முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதற்காக தெய்வானை அம்பாள், திருக்கல்யாண தபசு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அம்பாளுக்கு ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான், தபசு மண்டபம் வந்தடைந்தார். அங்கு தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு, சுவாமியும், அம்பாளும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தனர். கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானைக்கும் 16 வகையான பொருட்களாள் அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 11 மணி அளவில் ஐதீக முறைப்படி திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மேலும் மொய் எழுதி, பிரசாதம் பெற்று சென்றனர். திருக்கல்யாணம் முடிந்த உடன், பக்தர்கள் சுவாமி மற்றும் அம்பாளை மறுவீடு அனுப்பி வைத்தனர்.