மண்டல சர்வதேச பள்ளிகளுக்கு இடையேயான மாணவியர் கூடைப்பந்து போட்டி | Sports | Kovai
கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் சர்வதேச பள்ளியில் மண்டல சர்வதேச பள்ளிகளுக்கு இடையேயான மாணவியர் கூடைப்பந்து போட்டி துவங்கியது. போட்டிகளை இந்துஸ்தான் சர்வதேச பள்ளி முதல்வர் சுஜா துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதில் 12, 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. 12 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடந்தன. 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 7 அணிகள், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 5 அணிகள் பங்கேற்றன. இதில் 12 வயதுக்கு உட்பட்ட பிரிவின் முதல் போட்டியில் இந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளி அணியும், கோவை கிட்ஸ் கிளப் அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் 10-2 என்ற புள்ளிக் கணக்கில் இந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளி அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் விளையாடிய சேலம் இந்தியன் பப்ளிக் பள்ளி அணி 9-3 என்ற புள்ளி கணக்கில், யெல்லோ டிரெயின் பள்ளி அணியை வென்றது. தொடர்ந்து நடந்த போட்டியில் சி.எஸ். அகாடமி அணி 6-4 என்ற புள்ளிக் கணக்கில் சேலம் வோர்ல்டு பப்ளிக் பள்ளியை வென்றது. அதேபோல் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவின் முதல் போட்டியில் சேலம் இந்தியன் பப்ளிக் பள்ளி 15-25 என்ற புள்ளிக் கணக்கில் யெல்லோ டிரெயின் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஈரோடு இந்தியன் பப்பளிக் பள்ளி அணி 14-4 என்ற புள்ளிக் கணக்கில் கிட்ஸ் கிளப் அணியை வென்றது. 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுக்கான போட்டிகள் நாளை நடக்கிறது. இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.